Published : 16 Feb 2019 04:40 PM
Last Updated : 16 Feb 2019 04:40 PM
பாஜக அதிமுக கூட்டணி வெல்லாது, வெல்லவேண்டும் என்றால் டிடிவி அணியுடன் கூட்டணி வைக்கவேண்டும், இல்லாவிட்டால் திமுக அதிக இடங்களை வெல்லும் என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
அதிமுக பாஜக கூட்டணி குறித்து?
நாம் தனியாக நிற்கவேண்டும். நமக்கு தனிப்பட்ட கொள்கை. மக்களிடம் நமது கொள்கைத்தான் கொண்டுச் செல்லப்படவேண்டும். நாம் ஒரு முறை இருமுறை தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை என நான் பலமுறை கூறியிருக்கிறேன்.
அப்படி கூட்டணி செல்லவேண்டும் என்றால் சசிகலாவுடன் கூட்டணி வைக்கவேண்டும். ஆனால் சசிகலா தயாராக இல்லை
சசிகலா என்றால் டிடிவி தினகரனுடனா?
சசிகலா தான் டிடிவி தினகரன், சசிகலா இல்லாவிட்டால் டிடிவி தினகரன் ஒன்றுமே இல்லை.
அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பாஜக எத்தனை சீட்டுகள் வெல்வார்கள்?
அது எனக்கு தெரியாது. நான் கவனிக்கவே இல்லை
அதிமுக கூட்டணி வெல்லாது என்கிறீர்களா?
அது எனக்கு தெரியாது. இதுகுறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. யாரும் என்னிடம் கேட்கவும் இல்லை, நானும் யாரிடமும் கேட்கவும் முயற்சி எடுக்கவுமில்லை.
உங்கள் யோசனை என்ன?
பாஜக நின்றால் தனியாக நிற்கணும். இல்லாவிட்டால் சசிகலாவுடன் கூட்டணி வைக்கவேண்டும். அப்போதுதான் வெற்றி கிடைக்கும். வெற்றிக்காக இரண்டு தேர்தல் தோற்றுப்போனாலும் பரவாயில்லை.
திமுக கூட்டணி எப்படி உள்ளது?
நமது ஓட்டு பிரிந்துபோனால் அவர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
திமுக காங்கிரஸ் கூட்டணி எப்படி வலுவாக உள்ளதா?
அப்படியெல்லாம் இல்லை. நமது முட்டாள் தனத்தில் ஓட்டை பிரித்துக்கொடுத்தால் நடக்கும். சசிகலா தினகரன் பாஜக கூட்டணி திமுக கூட்டணியை எதிர்த்து நின்றால் சசிகலா டீம் வெல்லும். 40-ல் 30 இடங்களை வெல்வார்கள்.
ஆனால் அப்படி நடக்காது. அப்படி இல்லாமல் மூன்றாக பிரிந்து பாஜக ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி திமுக கூட்டணி, சசிகலா டீம் தனியாக நின்றால் என்றால் அந்த வாக்குகள் பிரிவதில் திமுகவுக்கு லாபம் கிடைக்கும்.
அப்படியானால் திமுக வெல்லும் என்கிறீர்களா?
அதிக சீட்டுகள் கிடைக்கும். பாஜக சசிகலாவுடன் இல்லாவிட்டால் திமுக அதிக இடங்களை வெல்லும். ஆனால் பாஜக தனியாக நின்றால் கொஞ்சம் வாக்குகள் கிடைக்கும் அடுத்தடுத்த தேர்தலில் வெல்லலாம்.
அதிமுக பாஜக கூட்டணி அமையாவிட்டால் தேசிய அளவிலான கூட்டணி அமையுமா?
தேசிய அளவில் எப்படி கூட்டணி அமையும்? அவர்கள் திராவிட கட்சிகள், நாங்கள் இந்துவாதி அது எப்படி அமையும். இப்போது தமிழ்நாட்டில் உள்ள பாஜக விருந்தினர் மாளிகை(ஹாஸ்பிடாலிட்டி சென்டர்) மாதிரி உள்ளது. நான் கட்சியையும் விட்டுக்கொடுக்க முடியாது.
நீங்கள் கூட்டணி பற்றி இங்குள்ள கட்சி மேலிடத்தில் பேசினீர்களா?
நான் எதற்கு பேசணும். என்னிடம் பேசினால் நான் பேசுவேன். நான் எதற்காக வலிய போய் பேசவேண்டும்.
நீங்கள் மூத்த தலைவர் அல்லவா?
அது சரி, ஆனால் அதற்கு அர்த்தம் எல்லாவற்றிலும் நானே போய் கேட்கணும் என்பதல்ல. இதுவரை அவர்கள் என்னிடம் எதுவும் பேசியதில்லை. இந்த 5 ஆண்டுகளில் ஒரு நாளும் அவர்களிடம் நான் பேசியதில்லை.
என்னுடைய அரசியல் ராமர் கோவில் கட்டுவது, ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுப்பது. இந்தியா முழுதும் தேசப்பக்தி வளர்க்க நான் நாடு முழுதும் சுற்றி இருக்கிறேன். தமிழ்நாட்டுக்காக விசேஷமாக அக்கறை இப்போதைக்கு இல்லை.
இவ்வாறு சுப்ரமணியன் சுவாமி பேட்டி அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT