Published : 19 Feb 2019 10:31 AM
Last Updated : 19 Feb 2019 10:31 AM

இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் மீனாட்சியம்மன் கோயில்: ஆளில்லா கிராமத்தில் 60 ஏக்கரில் தென்னை, மா, நெல்லி சாகுபடி செய்து அசத்தல்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆன்மீகத்தில் மட்டுமில்லாது தற்போது விவசாயத்திலும் சாதிக்க ஆரம்பித்துள்ளது.

சுமார் 60 ஏக்கரில் தென்னை, மா, நெல் உள்ளிட்ட பல்கை மரப்பயிர்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருமானம் ஈட்டி அதை கோயில் காரியங்களுக்கு செலவிட்டு வருகின்றனர்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உலகப் புகழ் வாய்ந்தஆன்மீக ஸ்தலமாகவும், சுற்றுலா ஸ்தலமாகவும் திகழ்கிறது ஆன்மீகம், கலை, தொழில்நுட்ப அடிப்படையில் இந்தக் கோவில் தனிச்சிறப்பு வாய்ந்ததாக இன்றளவும் திகழ்கிறது. ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் மீனாட்சிம்மன் கோயிலுக்கு வருகின்றனர். இங்கு நடக்கும் சித்திரைத்திருவிழாவில் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.

இந்தக் கோவிலுக்கு சொந்தமாக மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்கள்மற்றும் சில மாவட்டங்களில் உள்ள67 ஊர்களில் 480-க்கும் மேற்பட்ட இடங்களிலும்  44 கிராமங்களில் பல ஏக்கர் நன்செய், புன்செய் நிலங்களும்உள்ளன. அதுமட்டுமன்றி, மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள 155 இடங்களில் கோவிலுக்கு தொடர் வருமானம் அளிக்கும் வகையில் 630 வீடு மற்றும் கடைகள்  என பல ஆயிரம் கோடி சொத்துகள் உள்ளன.

தற்போது பெரும் பணக்கார கோயிலாக மீனாட்சியம்மன் கோயில் இருந்தாலும், கடந்த காலத்தில் கோயில் கும்பாபிஷேகம், அன்றாட பூஜைகளுக்கும், உற்சவம் நடத்தவும் கோயில் நிர்வாகம் திண்டாடியுள்ளது. பொதுமக்களிடம் நன்கொடை வசூல் செய்து கும்பாபிஷேகம் நடந்த வரலாறு உண்டு.

பொதுவாக மீனாட்சியம்மன் கோயிலை பொறுத்தவரையில் மற்ற கோயில்களை காட்டிலும் செலவு அதிகம்.  திருவிழாக்கள் ஆண்டுமுழுவதும் நடக்கும். ஆண்டில் 240 நாட்கள் உற்சவம் விழா நடக்கிறது. அதனால், பூக்கள் அலங்காரம், சாமிக்கு பால் அபிஷேகம் செய்வதற்கு தேவையான பால், அன்னதானம் உள்ளிட்டவற்றுக்கு மிகப்பெரிய செலவாகும். 

தற்போது இந்த செலவை ஈடுகட்ட மீனாட்சிம்மன் கோயில் நிர்வாகம், ஆன்மீகப் பணியுடன் கடந்த 5 ஆண்டாக விவசாயப்பணியிலும் ஈடுபட்டுள்ளது. மீனாட்சிம்மன் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான பண்ணைத் தோட்டம், 120 ஏக்கரில் மதுரை அருகே கூடல் செங்குளம் கிராமத்தில் உள்ளது. இந்த கிராமம் ஆள் நடமாட்டமில்லாததால் வருவாய்துறையில் ஆளில்லா கிராமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கிராமத்தில் உள்ள மீனாட்சியம்மன் கோயில் பண்ணையில் கோயில் நிர்வாகம், சுமார் 65 ஏக்கரில் தென்னை, மா, கடம்பமரம், புளியம்மரம், நாவல், நெல்லி உள்ளிட்ட பல்வகை பழ மரங்களை சாகுபடி செய்துள்ளனர். இதுதவிர கால்நடைகளுக்கு தேவையான தீவனப்புல் வளர்க்கப்படுகிறது. விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு தற்போது கோயிலில் அன்றாடம் நடக்கும் பூஜைகள், விழாக்களுக்கு செலவிடப்படுகிறது.

இதுகுறித்து மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் நடராஜன் கூறுகையில், ‘‘தென்னை மரம் மட்டுமே 25 ஏக்கரில் சாகுபடி செய்துள்ளோம். இதில் 1,357 தென்னை மரங்கள், 50 ஆண்டு பழமையானவை. அதில் ஏற்கணவே தேங்காய் அறுவடை செய்கிறோம்.

தற்போது கடந்த 4 ஆண்டிற்கு முன்பு 8 ஏக்கரில் புதிதாக தென்னை மரக்கன்றுகள் வைத்தோம். இந்த மரங்கள் அடுத்த ஆண்டு மகசூல் கிடைக்க ஆரம்பிக்கும். முன்பு கோயில் அபிகேஷத்திற்கு தேவையான பாலை விலைக்கு வாங்கினோம்.

தற்போது உப்பளாச்சேரி, ஜெர்சி, காங்கேயம், தார்பார்க்கர் உள்ளிட்ட நாட்டு மாடுகளை நாங்களே வளர்ப்பதால் இந்த மாடுகள் கொடுக்கும் பால், கோயில் பால் அபிஷகத்திற்கு பயன்படுத்துவோம். அதுபோக மீதமாகும் பால் கோயிலுக்கு வரும் பக்தர்களுடைய குழந்தைகளுக்கு பால் இலவசமாக வழங்குகிறோம்.

முன்பு இந்த பசுமாடுகளுக்கும், கோயில் யானைகளுக்கும் தேவையான தீவனப்புல்களை வெளியே விலைக்கு வாங்கினோம். தற்போது தோட்டத்திலே தீனப்புற்களை வளர்த்து பசுமாடுகளுக்கும், யானைகளுக்கும் கொடுக்கிறோம், ’’ என்றார்.

காய்கறிகள் பயிரிட திட்டம்

கோயில் இணை ஆணையர் நடராஜன் மேலும் கூறுகையில், ‘‘சீமை கருவேலம் மரங்களையும் புற்களையும் வெட்டி விற்பதுமூலம் மாதம் 5 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. பழ மரங்கள், புல்களை வளர்க்க ரசாயண உரங்களை பயன்படுத்துவதில்லை. பசுமாடுகள் சாணத்தை உரமாக்கி அதனை உரமாக பயன்படுத்துகிறோம்.

தோட்டத்தில் ஒரு குளம் உள்ளது. அதில் போதிய அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. அதனால், தற்போதுள்ள 2 கிணறுகளை ஆழப்படுத்தி அதில் கிடைக்கும் தண்ணீரை கொண்டு விவசாயம் செய்கிறாம். நல்ல மழை பெய்தால் அடுத்த ஆண்டு முதல் அன்னதானத்திற்கு தேவையான காய்கறிகளையும் பயிரிட முடிவு செய்துள்ளோம், ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x