Published : 04 Feb 2019 01:56 PM
Last Updated : 04 Feb 2019 01:56 PM

தொடரும் காவலர் தற்கொலை; திருச்சியிலும் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை

மன உளைச்சலால் காவலர்கள் தற்கொலை செய்துக்கொள்வது தொடர்கிறது, காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடக்க இருப்பதால், மனம் உடைந்த திருச்சி பெண் சிறை வார்டன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

தமிழகத்தில் காவலர்கள் தற்கொலைகள் தொடர்ந்து வருகிறது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் தனது முன்னாள் காதலி, பிறந்தநாளுக்கு தன்னை வாழ்த்தவில்லை என மனம் உடைந்த ஆயுதப்படைக்காவலர் மணிகண்டன் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைச் செய்துக்கொண்டார்.

அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் நேற்று மாலை திருச்சி பெண்கள் சிறை வார்டன் இளம் காவலர் காதல் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தமிழ் செல்வி.

ஆயுதப்படை காவலரான இவர் திருச்சி பெண்கள் சிறையில் வார்டனாக பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல் நேற்றிரவு இரவு பணிக்கு  செல்ல வேண்டியவர் பணிக்கு வராமல் தகவலும் தராததால் சக காவலர்கள் அவருக்கு போன் செய்துள்ளனர்.

ஆனால் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்தது.  இதையடுத்து அவர் தங்கியிருந்த அறைக்கு சக காவலர்கள்,  அவரது அறைக்கதவு பூட்டப்பட்டிருந்தது. வெகு நேரம் தட்டியும் திறக்காததால் அவர்கள், திருச்சி கே.கே.நகர் போலீஸாருக்கு தகவல் சொன்னார்கள். அங்கு வந்த போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, செந்தமிழ் செல்வி பெட்ரூமில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது.

அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர்  போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் செந்தமிழ்செல்விக்கு திருச்சி மத்திய சிறையில் பணியாற்றி வரும் சக காவலர் ஒருவரை காதலித்துள்ளார். இருவருமே நெருங்கி பழகியுள்ளனர்.

திடீரென மனஸ்தாபம் காரணமாக பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. பிரிவு அதிகமாகி அவரது காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து, வரும் 6-ம் தேதி திருமணம் நடக்க உள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மனம் உடைந்த செந்தமிழ்ச்செல்வி தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் கருதுகிறார்கள்.

தமிழக காவல்துறையில் பணியாற்றும் இளம் காவலர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திராணியற்று தற்கொலை முடிவை நாடுவது அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படவேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x