Published : 03 Jan 2019 03:07 PM
Last Updated : 03 Jan 2019 03:07 PM

கருணாநிதியின் சாதனைகள் என்றென்றைக்கும் இந்த மண்ணில் நிலைத்திருக்கும்: பேரவையில் முதல்வர் பழனிசாமி புகழாரம்

கருணாநிதியின் சாதனைகள் என்றென்றைக்கும் இந்த மண்ணிலே நிலைத்திருக்கும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் புதன்கிழமை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. வரும் 8 ஆம் தேதி வரை கூட்டம் நடைபெறும் என, சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி மறைவுக்காக இன்று சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட இரங்கல் தீர்மானத்தின் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை:

"தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதியும், 50 ஆண்டுகளாக திமுகவின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்த மு.கருணாநிதியுடைய மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை நான் முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். 

1937-ல் அரசுப்பள்ளிகளில் இந்திப் படிப்பு கட்டாயமாக்கப்பட்டது. அதனைக் கண்டித்து, நீதிக்கட்சி தொடர் போராட்டங்களை முன்னெடுத்தது. 13 வயதிலேயே கருணாநிதி இந்தப் போராட்டங்களால் ஈர்க்கப்பட்டார். தன் பள்ளி நண்பர்களை ஒருங்கிணைத்து, 'இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பு' என்ற இயக்கத்தைத் தொடங்கினார். இந்தி எதிர்ப்புப் பேரணிகளையும் நடத்தினார். போராட்டத்திற்கு மாணவர்களைத் திரட்ட அந்த சிறு வயதிலேயே 'மாணவ நேசன்' என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார். 17 வயதில் தமிழ்நாடு மாணவர் மன்றத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 

1942-ல் அண்ணா நடத்திய திராவிட நாடு பத்திரிகையில் கருணாநிதி எழுதிய 'இளமைப்பலி' என்ற படைப்பு வெளியானது. அப்படைப்பு அண்ணாவைப் பெரிதும் கவர, திருவாரூரில் ஒரு விழாவுக்காக வந்திருந்த அவர், கருணாநிதியை அழைத்துப் பாராட்டினார்.

1957-ம் ஆண்டு முதன்முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் நுழைந்த கருணாநிதி, 13 முறை தமிழ்நாடு சட்டப்பேரவைக்கும், ஒரு முறை சட்ட மேலவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாகப் பணியாற்றியவர்.

1967-ல் அண்ணா தமிழ்நாட்டின் முதல்வரான போது அவரது அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து திறம்பட பணியாற்றியவர்.

கருணாநிதி 1969 ஆம் ஆண்டு முதன்முறையாக தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்றார். ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர். அரசியல் மட்டுமன்றி, தமிழ் இலக்கியம், தமிழ் திரைப்படங்களில் திரைக்கதை, வசனம் போன்ற துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். நாடகம், கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், வரலாறு என எல்லா இலக்கியத் தளங்களிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. 'பழனியப்பன்' என்ற நாடகமே கருணாநிதி முதன்முதலில் எழுதிய நாடகமாகும். திருவாரூரில் அந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்தார்.

'தூக்குமேடை', 'சிலப்பதிகாரம்', 'மணிமகுடம்', ஒரே ரத்தம்', 'காகிதப்பூ', 'நானே அறிவாளி', 'வெள்ளிக்கிழமை', 'திருவாளர் தேசியம்பிள்ளை', 'அனார்கலி', 'சாம்ராட் அசோகன்', 'சேரன் செங்குட்டுவன்', 'நாடகக்காப்பியம்' உள்பட பல நாடகங்களை அவர் எழுதியவர்.

'தூக்குமேடை' நாடகத்தைப் பார்த்து மகிழ்ந்த எம்.ஆர்.ராதா, 'கலைஞர்' என்ற அடைமொழியை அவருக்கு வழங்கினார்.

'நளாயினி', 'பழக்கூடை', உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். 'புதையல்', 'வான்கோழி', 'சுருளிமலை', 'ஒரு மரம் பூத்தது', 'ஒரே ரத்தம்', 'ரோமாபுரிப் பாண்டியன்', 'தென்பாண்டிச் சிங்கம்', 'பொன்னர் சங்கர்' ஆகிய நாவல்களையும் எழுதியிருக்கிறார்.

'தென்பாண்டிச் சிங்கம்' நாவல், 1989-ம் ஆண்டுக்கான தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் 'ராஜராஜன்' விருதைப் பெற்றது. திருக்குறளை ஆய்ந்து எளிய நடையில் எழுதிய 'குறளோவியம்', கருணாநிதியின் முக்கிய இலக்கியப் படைப்பாகும். 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் தன் வாழ்க்கை நிகழ்வுகளை ஆறு தொகுதிகளாகவும் வெளியிட்டிருக்கிறார். 

'சங்கத்தமிழ்', 'தொல்காப்பியப் பூங்கா', 'இனியவை இருபது', 'மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று', 'மலரும் நினைவுகள்', 'கலைஞரின் கவிதை மழை', 'இளைய சமுதாயம் எழுகவே' உள்பட 178 நூல்களை கருணாநிதி எழுதியுள்ளார்.  தமிழ் மொழிக்காக அவர் ஆற்றிய தொண்டு மகத்தானது.

தமிழ்நாட்டு அரசியல் மட்டுமன்றி, இந்திய அரசியலிலும் தனது முத்திரையைப் பதித்தவர். கருணாநிதி முதல்வராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் பாராட்டத்தக்க அளவில் பணியாற்றி இருக்கிறார். அவரது ஆட்சிக் காலத்தில் தீட்டப்பட்ட சில திட்டங்களையும், இயற்றப்பட்ட சில சட்டங்களையும், மேற்கொண்ட நடவடிக்கைகளையும் மக்கள் நலன் கருதி அதிமுக சார்பில் நாங்கள் வரவேற்று இருக்கிறோம். அதே சமயத்தில், கொள்கை ரீதியில் மாறுபாடு இருக்குமேயானால், அதனை நாங்கள் எதிர்த்திருக்கிறோம். ஜெயலலிதாவும், அதே போல எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும், நானும் 1989 ஆம் ஆண்டு முதன்முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு காலடி எடுத்து வைத்தபோது கருணாநிதி முதல்வராக இருந்தார்.

அப்போது நடந்த சட்டபேரவைக் கூட்டத் தொடரில், சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.சிங்காரம் உரையாற்றியபோது, சட்டபேரவை உறுப்பினர்கள் இறந்தால் 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக இங்கே அறிவித்து இருக்கிறார்கள். இது ஒரு அரை லட்சியம் தான்.  ஆனால் நம்முடைய லட்சியம் லட்சம். இந்த லட்சத்தை வருகின்ற சட்டபேரவை கூட்டத்திலேயே லட்சியமாக அறிவிப்பதற்கும், இன்னும் பல கோரிக்கைகளை செய்வதற்கும் நம்முடைய முதல்வர் காத்திருக்கிறார்கள் என்று சொன்னார். உடன் பதில் அளித்த அன்றைய முதல்வர் கருணாநிதி, என்னுடைய லட்சியம் உறுப்பினர் சிங்காரம் நீண்ட காலம், பல ஆண்டு காலம், பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ வேண்டும் என்பது தான் என்று சொன்னார்.  கோரிக்கையை அப்போது ஏற்கவில்லை என்றாலும் கோரிக்கை வைத்தவர் மனம் மகிழ்கிற வகையில், பதில் சொல்கிற வல்லமை பெற்றவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு, காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, நானும், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களும் மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்தோம். வயது மூப்பின் காரணமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது, விரைவில் உடல் நலம் தேறி, மீண்டும் தன்னுடைய அரசியல் பணியைச் செய்வார் என்று நாங்கள் எல்லாம் எதிர்பார்த்த நேரத்தில், அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி, எங்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. நானும், துணை முதல்வரும், சபாநாயகரும் நேரிலே சென்று அஞ்சலி செலுத்தினோம்.

கருணாநிதியின் அரசியல் வாழ்க்கைக்கு, அவரிடமிருந்த பன்முக ஆற்றல் காரணமாக அமைந்தது. அவர் கதை வசனம் எழுதிய 'பராசக்தி' என்ற திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு பகுத்தறிவாளன் என்பதை சமுதாயத்திற்கு தெரியப்படுத்தினார். அதன் பிறகு அவர் கதை வசனம் எழுதிய படங்களில் எல்லாம் சமுதாய விழிப்புணர்வு கருத்துகளைப் பதிவு செய்திருந்தார்.

 'ராஜகுமாரி', 'மலைக்கள்ளன்', 'திரும்பிப் பார்', 'ராஜா ராணி', 'மந்திரி குமாரி', 'பூம்புகார்', 'மனோகரா', 'புதுமைப்பித்தன்', 'அரசிளங்குமரி', 'இருவர் உள்ளம்', 'எங்கள் தங்கம்', 'குறவஞ்சி' என 75-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதை, வசனம் எழுதியிருக்கிறார். கருணாநிதியின் 'பொன்னர் சங்கர்' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் திரைப்படம் உருவாக்கப்பட்டது.  எளிய தோற்றம், இனிய பண்பு, எல்லோரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய குணம் அவரிடம் அமைந்திருந்தன.

இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு முதல் தற்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி வரை அனைத்து பிரதமர்களையும் கண்ட பெருமை அவருக்கு உண்டு என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து, ஒருவர் பிறக்கிறார், வாழ்கின்றார், மறைகின்றார். அந்த இடைப்பட்ட காலத்திலே செய்த சாதனை என்றைக்கும் இந்த மண்ணிலே நிலைத்திருக்கும். அந்த வகையிலே, கருணாநிதி சாதனை இந்த மண்ணிலே நிலைத்திருக்கும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து, அவருடைய மறைவுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரைப் பிரிந்து வாடும் எதிர்க்கட்சித் தலைவருக்கும், அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும், எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கும், அவர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x