Published : 11 Jan 2019 08:04 AM
Last Updated : 11 Jan 2019 08:04 AM

ரஜினி, அஜித் படங்கள் வெளியானதில் ரசிகர்கள் உற்சாகம்: வேலூரில் உள்ள திரையரங்கில் ‘சீட்’ பிடிப்பதில் 2 பேருக்கு கத்திக்குத்து

பொங்கல் பண்டிகை ரிலீஸாக ’பேட்ட’, ‘விஸ்வாசம்’ ஆகிய திரைப்படங்கள் நேற்று வெளியானதை ரசிகர்கள் உற்சாகம் பொங்க கொண்டாடினர்.

ரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படமும், அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்பட மும் நேற்று வெளியாகின. இந்த இரு படங்களும் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் என்ற அறிவிப்பு வெளியானது தொடங்கி கடந்த இரண்டு வாரங்களாகவே தமிழகம் முழுக்க ரசிகர்கள் பேனர், போஸ்டர் வைத்து வெகுவாக கொண்டாடத் தொடங்கினர்.

இந்நிலையில் நேற்று முதல் நாள் என்பதால் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் அதிகாலை 4.30 மணி முதல் காட்சிகள் திரையிடப்பட்டன. பல இடங்களில் பாலாபிஷேகம், கட் அவுட், கரும்பு, பொங்கல் வைத்து சிறப்பு பூஜை, ஏழை ரசிகருக்கு இலவச திருமணம் என உற்சாகம் பொங்க கொண்டாடினர்.

கடந்த சில ஆண்டுகளாகவே பண்டிகை, திருவிழா நாட்களில் பெரிய நடிகரின் படம் ரிலீஸ் என்றால் ஒரு படம் மட்டுமே ரிலீஸ் என்ற முறையில் திரையரங்குகளில் படம் வெளியாகி வந்தது. இதற்கிடையே இம்முறை ரஜினி, அஜித் என இரண்டு நடிகர்களின் படங்கள் ஒரே தேதியில் ரிலீஸ் என்றதும் மேலும் பரபரப்பும், உற்சாகமும் கூடியது. ரசிகர்களைப் போல தமிழ்த் திரைத்துறையைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள் பலரும் ரஜினி, அஜித் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினி படம் ரிலீஸ் என்றால் வழக்கம் போல சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து ரசிகர்கள் சென்னைக்கு திரளாக வந்து படம் பார்த்து கொண்டாடுவார்கள். இம்முறை ‘பேட்ட’ திரைப்படத்துக்கும் அது நடந்துள்ளது. மேலும் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் நேற்று சென்னை யில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர்.

வேலூர் அலங்கார் திரையரங்கில் விஸ்வாசம் திரைப்படம், நேற்று அதிகாலை 3 மணிக்கு ரசிகர் மன்ற காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதிகாலை 2.30 மணிக்கு ரசிகர்கள் முண்டியடித்து உள்ளே சென்றனர். இருக்கைகளை பிடிப்பதில் ரசிகர்களிடையே போட்டி நிலவியது. அப்போது, வேலூர் ஒல்டு டவுனை சேர்ந்த கூலி தொழிலாளி ரமேஷ் (32), உறவினர் பிரசாத் (20) ஆகிய இருவருக்கும் கத்திக்குத்து விழுந்தது.இதைப் பார்த்த ரசிகர்கள் சிதறி ஓடினர். இதுதொடர்பாக பிரதாப் என்பவரை போலீஸார் தேடுகின்றனர்.

பணம் தராத தந்தை மீது தீவைப்பு

காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்த பீடித் தொழிலாளி பாண்டியனின் மகன் அஜித்குமார், ‘விஸ்வாசம்’ ரசிகர் மன்ற காட்சிக்கு செல்ல தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். அவர் மறுக்கவே, அஜித்குமார் தந்தை மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அஜித்குமார் கைது செய்யப்பட்டார்.

கட்அவுட் சரிந்து 6 பேர் காயம்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள ஒரு திரையரங்கில் நேற்று காலை, அஜித்தின் 15 அடி கட் அவுட்டுக்கு ரசிகர்கள் சிலர் பாலாபிஷேகம் செய்தனர். அப்போது திடீரென கட் அவுட் சரிந்து விழுந்தது. இதில், கட் அவுட் மேல் நின்றிருந்த 6 பேர் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x