Last Updated : 06 Jan, 2019 10:36 AM

 

Published : 06 Jan 2019 10:36 AM
Last Updated : 06 Jan 2019 10:36 AM

இளைஞர்களை மெல்லக் கொல்லும் ‘போதை ஸ்டாம்ப்’?

போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள், கஞ்சா, அபின், ஹெராயின், மயக்க ஊசி என விதவிதமான போதைப்பொருட்களைப் பயன்படுத்தி இன்பம் காண்கின்றனர். சட்டத்துக்குப் புறம்பான போதைப்பொருள் புழக்கத்தை காவல்துறையினர், கண்காணித்து கட்டுப்படுத்தினாலும், போதைப் பொருள் கடத்தல் கும்பல் விதவிதமான உத்திகளைப் பயன்படுத்தி வெவ்வேறு வடிவங்களில் அவற்றை இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் புகுத்துகின்றனர்.

 

போதைப் பொருட்களை ஓரிடத்தில் தயாரித்தல், பல்வேறு இடங்களுக்கு கடத்திச் செல்லுதல், அந்தந்த பகுதிகளில் வியாபாரிகளிடம் சேர்த்தல், அவர்களிடமிருந்து இளைஞர்கள், மாணவர்களுக்கு விற்பனை செய்தல் என பெரிய ‘நெட்வொர்க்' செயல்பட்டு வருகிறது.

 

கோவை மாநகரைப் பொறுத்தவரை கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகளில் போதைப் பொருட்களை கலந்து விற்ற கும்பல் காட்டூர் போலீஸாரிடம் சிக்கியது.

 

இந்நிலையில் தமிழகத்தில் ‘போதை ஸ்டாம்ப்' என்ற பெயரில் புதிய வகை போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த ஸ்டாம்புகள் கடந்த 1-ம் தேதி சென்னையில் கைப்பற்றப்பட்டு, கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்துள்ளனர் மாநில போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸார்.

 

போதை ஸ்டாம்புகள் கோவா, மும்பை, ஹரியாணா ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கடத்திச் சென்று விற்கப்படுகிறது. கோவையிலும் வசதியான இளைஞர்கள் மற்றும் மாணவர்களைக் குறிவைத்து, ‘போதை ஸ்டாம்புகள்' விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.

 

இது குறித்து கோவை மாநகரக் காவல் ஆணையர் சுமித் சரண் கூறியதாவது:

 

கோவை மாநகரில் ‘போதை ஸ்டாம்புகள்' விற்பனை நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல்கள் வந்துள்ளன. அதன்பேரில் மாநகரக் காவல் நிலைய பகுதிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. போதைப்பொருள் தடுப்புப் பிரிவு உஷார்படுத்தப்பட்டு, மாநகரக் காவல் எல்லைகள் தீவிரக் கண்காணிப்பில் உள்ளன. கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு 2.5 கிலோ கஞ்சா கடத்தி வந்த கும்பல் பீளமேடு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகரில் ‘போதை ஸ்டாம்ப்கள்' விற்பனை செய்யும் கும்பல் விரைவில் பிடிபடும்.

 

இவ்வாறு அவர் கூறினார்.

 

ஹைடெக் போதைப் பொருள்

 

தபால்தலை போன்று காணப்படும் போதை ஸ்டாம்ப்கள், ஹைடெக் போதைப் பொருள். சிந்தடிக் ரகத்தில் தயாரிக்கப்படும் இந்த ஸ்டாம்ப்கள் ‘எல்.எஸ்.டி.' எனப்படும் ‘லைசர்ஜிக் ஆசிட் டை எத்திலாமைட்' என்ற போதை மருந்தில் ஊற வைத்து தயாரிக்கப்படுகிறதாம். கணினி மற்றும் செல்போன்களில் பயன்படுத்தப்படும் பல்வேறு பாவனைகள் கொண்ட ஸ்மைலிகள், வாகனங்கள், கார்ட்டூன்கள், இயற்கை காட்சிகள் போன்றவற்றைக் கொண்டு அச்சடிக்கப்பட்டு போதைப்பொருள் எனக் கண்டறிய முடியாத வகையில் தயாரிக்கப்படுகிறதாம். இதை நாக்கில் ஒட்ட வைத்துக் கொண்டால் பல மணி நேரம் போதை நீடிக்குமாம். வெளியில் யாருக்கும் தெரியாது என்பதால், வசதி படைத்தவர்கள் பலர் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. மெல்லக் கொல்லும் போதைப் பொருட்களுள் ஒன்றான, போதை ஸ்டாம்ப்களை பயன்படுத்துவது உடல் நலனுக்கு கடும் பாதிப்பை விளைவிக்கும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x