Last Updated : 03 Jan, 2019 07:59 AM

 

Published : 03 Jan 2019 07:59 AM
Last Updated : 03 Jan 2019 07:59 AM

மக்களவை தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கும் பாஜக; 39 தொகுதிகளிலும் ஜன. 5, 6-ல் மகா சக்தி கேந்திர மாநாடு

மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராகி வருகிறது. இதற்காக, தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வரும் 5, 6-ம் தேதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகா சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் தலைமையில் மாநாடு நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சக்தி கேந்திர பொறுப்பாளர்களை கடந்த சில மாதங்களுக்கு முன்னரே பாஜக நியமித்திருந்தது. ஒவ்வொரு தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகளை ஒரு சக்தி கேந்திரமாக பிரித்து அதற்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 30 வாக்குச்சாவடிகளை கொண்டது மகா சக்தி கேந்திரமாக பிரிக்கப்பட்டு அதற்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த சக்தி கேந்திரங்களில் கட்சியின் அனைத்து பிரிவு தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரும் பொறுப்பாளராக பணியாற்றுகிறார்கள்.

பொறுப்பாளர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது தொடர்பாக, 30 பக்கங்கள் கொண்ட மகாசக்தி, சக்தி கேந்திர பொறுப்பாளர் கையேடு தயாரிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாகவும் மகா சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் பங்கேற்ற தேர்தல் ஆலோசனை கூட்டங்கள் 4 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது.

அடுத்தகட்டமாக வட்டாரம், கிராம அளவில் அந்தந்த பகுதி மகா சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் தலைமையில் வரும் 5, 6-ம் தேதிகளில் தேர்தலுக்கான செயல்வீரர்கள் கூட்டம் தமிழகம் முழுக்க நடத்தப்படவுள்ளது. இந்த கூட்டங்களில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கிறார்கள். தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் 2,027 மகா சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் தலைமையில் இந்த கூட்டங்களை மாநாடுபோல் நடத்த கட்சி திட்டமிட்டுள்ளது. கூட்டத்தின் தீர்மானங்களின் அடிப்படையில் தேர்தல் பணிகளில் பொறுப்பாளர்கள் முழுவீச்சில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x