Published : 07 Jan 2019 09:15 AM
Last Updated : 07 Jan 2019 09:15 AM

தேசிய நுழைவுத் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் திணறுவது ஏன்?- என்சிஇஆர்டி பாடத் திட்டத்தை தமிழக அரசு பின்பற்ற கோரிக்கை

மு.இசக்கியப்பன்

ஐஐடியில் பயில்வதற்கான ஜேஇஇ மெயின் தேர்வுகள் நாடு முழுவதும் 273 நகரங்களில் வரும் 8-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெறுகின்றன. மாணவ, மாணவியர், பிளஸ் 2 பொதுத்தேர்வை மறந்துவிட்டு, நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனவரியில் ஜேஇஇ தேர்வு, பிப்ரவரியில் பிளஸ்2 செய்முறைத் தேர்வு, மார்ச்சில் பிளஸ்2 பொதுத்தேர்வு, ஏப்ரலில் மீண்டும் ஜேஇஇ தேர்வு, மே மாதம் நீட் தேர்வு, தொடர்ந்து கல்லூரிக்கான சேர்க்கை என, மாணவர்களுக்கு நிமிர முடியாத அளவு சுமை.

இந்தியாவிலேயே, தமிழக மாணவர்கள்தான் இவ்வளவு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். வட மற்றும் பிற தென்மாநில மாணவர்கள் எவரும் இவ்வளவு இடர்களை சந்திப்பதில்லை. தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகள் அவர்களுக்கு சுமையாக இருக்க வில்லை. ஏன் இந்த வேறுபாடு?

பிற மாநிலங்களில்..

கேரளத்தில் மாநில பாடத்திட்டம் என்பது இல்லை. தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் கழக (NCERT) பாடத்திட்டத்தை மட்டுமே அம்மாநிலம் பின்பற்றுகிறது. அதுவும், ஆங்கிலத்தில் மட்டுமே.

மலையாளத்தில் இல்லை. ஆந்திரமாநிலத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் மாநில மற்றும் தேசியபாடத்திட்டங்கள் பயிற்றுவிக்கப் படுகின்றன. மாணவர்கள் எதிலும் சேர்ந்து பயிலலாம்.

கர்நாடகத்தில் மாநில பாடத் திட்டம் மட்டும்தான். ஆனால், கணக்கு மற்றும் அறிவியல் பாடங்கள் தேசிய கல்வி ஆராய்ச்சிபயிற்சிக் கழக (NCERT) புத்தகங் களுக்கான காப்புரிமையைப் பெற்று, தனியார் பதிப்பாளர்கள் மூலம் பதிப்பித்து அதையே பயன்படுத்துகிறார்கள்.

தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் கேள்விகள் தேசிய பாடத்திட்டத்தில் இருந்துதான் கேட்கப்படுகின்றன. இதனாலேயே, நம்மைச்சுற்றியுள்ள மாநிலங்கள் தங்கள் பாடத்திட்டங்களை அதற் கேற்ப மாற்றிக் கொண்டுள்ளன.

தமிழகத்தின் நிலைமை

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில பாடத்திட்டம் மட்டுமே பின்பற்றப் படுகிறது. இங்கு ஆட்சி செய்த அரசுகள் மத்திய அரசின் பாடத்திட்டத்தை ஏற்கவில்லை. எனினும்,கடந்த ஆண்டு வரை மாணவர் களுக்கு எந்த பிரச்சினையும் எழவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால், நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது கட்டாயமானது. இதுதான், தமிழக மாணவர்களுக்கு முதல் அடி. தேசிய பாடத்திட்டம் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில், அதனடிப்படையில் மட்டுமே கேட்கப்படும் நீட், ஜேஇஇ தேர்வுகளை எப்படி எழுதுவது?

தமிழக அரசின் நடவடிக்கை

எனினும், தமிழக அரசும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மொழிப்பாடங்களின் சுமையைக் குறைக்க 2-ம் தாள் நீக்கப்பட்டது. தேசிய பாடத்திட்டத்துக்கு இணை யாக பிளஸ் 1 பாடத்திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய் துள்ளது.

பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது. இப்புதிய பாடத்திட்டத்தை குறிப் பிட்ட காலத்துக்குள் கற்பிக்க முடியுமா? மாணவனால் இதனைப் புரிந்துகொள்ள முடியுமா என்றகேள்விகள் தற்போது எழுந் துள்ளன.

புதிய பாடத்திட்டம் சுமை

திருநெல்வேலி மகாராஜநகர் ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் வெள்ளிவிழா பள்ளி இயக்குநர் ஜெயேந் திரன் வி.மணி கூறும்போது, ``தலை சிறந்த அறிஞர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் பிளஸ்1 புதிய பாடத்திட்டம், சிறந்த படைப்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால், இதனை பயிற்று விக்க ஆசிரியர்களும், பயில் வதற்கு மாணவர்களும் சிரமப்படு கின்றனர். உதாரணமாக தேசிய பாடத்திட்டத்தில் உயிரியல் பாடத் துக்கான புத்தகம் 342 பக்கங்களை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால்,தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில், உயிரியல் என்பது 4 தொகுதிகளாக 838 பக்கங்களுடன் உள்ளது. நீட் தேர்வு எழுதும் தேசிய பாடத்திட்ட மாணவர் 342பக்கங்களை மட்டும் படித்தால் போதும். ஆனால், தமிழக மாணவர்838 பக்கங்களை படிக்க வேண்டி யுள்ளது. இவ்வளவு சுமை எதற்காக?

ஒரு மாணவன் ஒரு பக்கத்தை படிக்க அரை மணி நேரமாகும். உயிரியலை மட்டும் படிக்க சுமார் 400 மணி நேரம் வேண்டும். பள்ளியில் நடத்தியதுபோக, ஓராண்டில் அவனால் மேலும் ஒரு முறை புத்தகத்தை புரட்டுவதற்குக் கூட நேரமிருக்காது. மற்ற பாடங்களையும் அவன் படித்தாக வேண்டும்.

மற்ற மாநிலங்களில் மாநில அரசு தேர்வுக்கும், நீட் தேர்வுக்கும் அவர்கள் ஒரு புத்தகத்தை படித்தாலேபோதும். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுக்கு என்று ஒரு பாடப்புத்தகம், நீட், ஜேஇஇ தேர்வுக்கு வேறு ஒரு புத்தகத்தை படிக்கும் நிலை உள்ளது. இதனால் தேசிய அளவிலான தேர்வுகளில் தமிழக மாணவர்கள் போட்டியிடுவது கடினமாக உள்ளது. மாணவர்கள் நலன் கருதி கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களுக்கு மட்டுமாவது தேசிய பாடத்திட்டத்தையே தமிழக அரசு பின்பற்றுவது நல்லது” என்றார் அவர்.

கல்வி உரிமை சட்டம்

நமது வரிப் பணத்தில்தான் NCERT இயங்குகிறது. அந்த பாடத்திட்டத்தை கற்பதற்கான உரிமை, ஒவ்வொரு குழந்தைக்கும் இருக்கிறது. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் `அருகாமையில் உள்ள பள்ளி’ (Neighbourhood schooling) என்ற கொள்கையின் அடிப்படையில், குழந்தைகளுக்கு மாநில பாடத் திட்டமும், மத்திய பாடத் திட்டமும் இணையாக வழங்கப்பட வேண்டும். அதில் எந்த பாடத் திட்டம் தேவை என்பதை தேர்ந்தெடுக்கும் தார்மீக உரிமை குழந்தைகளுக்கு இருக்கிறது.

ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை NCERT கழகத்தின் கணிதம் மற்றும் அறிவியல் பாடப்புத்தகத்தை, பள்ளிகளில் நடத்த வேண்டும். 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் NCERT புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு கணக்கு மற்றும் அறிவியலுக்கு பாடக் குறிப்புகள் வழங்க வேண்டும்.

அப்போதுதான் தமிழக மாணவர்கள் தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கு எளிமையாகத் தயாராக முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x