Published : 05 Jan 2019 11:34 AM
Last Updated : 05 Jan 2019 11:34 AM

திருவாரூர் இடைத்தேர்தல்: அனைத்துக் கட்சிகளின் கருத்துகளையும் தேர்தல் அதிகாரி கேட்க வேண்டும்: ஸ்டாலின்

திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து, அனைத்து அரசியல் கட்சிகள், முக்கிய பிரமுகர்களின் கருத்துகளைக் கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் மறைவால் திருவாரூர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் 28 ஆம் தேதி அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய கட்சிகளான திமுக பூண்டி கலைவாணனையும், அமமுக எஸ்.காமராஜையும் தேர்தல் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. அதிமுக வேட்பாளர் இன்று தெரிய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், 'கஜா' புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்னும் நிவாரணப் பணிகள் முழுமை பெறவில்லை.  மக்கள் இயல்புநிலைக்கு திரும்பாத நிலையில், அங்கு தேர்தல் நடந்தால் மாவட்ட நிர்வாகத்தின் கவனம் முழுவதும் தேர்தலில்தான் இருக்கும். எனவே அங்கு தேர்தல் நடத்துவதற்கான சூழல் தற்போது இல்லை என்பதால், தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா தேர்தல் ஆணையத்திடம் வெள்ளிக்கிழமை மனு கொடுத்தார். இதே கோரிக்கைக்காக உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் டி.ராஜாவின் மனுவை பரிசீலித்த தேர்தல் ஆணையம், திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்த முடியுமா முடியாதா என ஆய்வு செய்து ஓரிரு நாளில் அறிக்கை அளிக்கும்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவுக்கு கடிதம் அனுப்பியது. இதனை அவர் மாவட்ட தேர்தல் அதிகாரியான திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சிகள், முக்கிய பிரமுகர்களின் கருத்துகளைக் கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளர்.

இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x