Published : 08 Jan 2019 10:00 AM
Last Updated : 08 Jan 2019 10:00 AM
உள்ளாட்சி தேர்தல் அறிவிப் பாணை மே கடைசி வாரம் பிறப்பிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலை குறித்த காலக்கெடுவுக்குள் நடத்தவில்லை எனக்கூறி மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோஸ்கான் மற்றும் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் டி.எஸ்.ராஜசேகர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ராஜா கார்த்திக், நெடுஞ்செழியன் ஆகியோர், ‘‘ உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு மறுவரையறை முடிந்து விட்டது. வரும் ஜன.31-க்குள் இடஒதுக்கீடு பணியும் முடிந்துவிடும். அதன்பிறகு வாக்காளர்கள் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளும் வரும் மே மாதத்தில் முடிவடையும். அந்த சமயம் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் வந்துவிட்டால் அப்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது. எனவே மே கடைசி வாரம் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிடப்படும்’’ என தெரிவித்தனர்.
அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்காக மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோஸ்கான் மற்றும் மாநில தேர்தல் ஆணையச் செயலாளர் டி.எஸ்.ராஜசேகர் இனி வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டியதில்லை என விலக்கு அளி்த்தனர். மேலும், உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள மனு குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜன.28-க்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT