Published : 09 Jan 2019 03:56 PM
Last Updated : 09 Jan 2019 03:56 PM
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் சென்றதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பொறுப்பேற்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "புதுக்கோட்டை இலுப்பூரில் மருத்துவ முகாமில் நடைபெற்ற இரு சக்கர வாகனப் பேரணியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியுள்ளார். இதில், 100க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனங்களில் சென்று விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பேரணியில் சென்ற பலரும் ஹெல்மெட் அணியவில்லை.
இதன் மூலம் மோட்டார் வாகனச் சட்டத்தையும், கட்டாய ஹெல்மெட் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் அமைச்சர் மீறியுள்ளார். இதனால் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்"
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அமைச்சர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாகனப் பேரணியில் ஹெல்மெட் அணியாமல் சென்றது யாதார்த்தமாக நடைபெற்ற நிகழ்வு. இதைப் பொருட்படுத்த வேண்டாம் என்றார்.
இதையேற்க மறுத்த நீதிபதிகள், வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்காக ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அமைச்சருக்கும் பொருந்தும். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்குப் பொறுப்பேற்று அமைச்சர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும் என்று கூறி வரும் 18-ம் தேதிக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT