Last Updated : 29 Jan, 2019 01:13 PM

 

Published : 29 Jan 2019 01:13 PM
Last Updated : 29 Jan 2019 01:13 PM

தூத்துக்குடியில் கடந்த 3 மாதங்களாக எத்தனை போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது? - மாவட்ட எஸ்.பி. நாளை நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடியில் கடந்த மூன்று மாதங்களில் போராட்டம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி கோரியவர்கள் எவ்வளவு, எத்தனை போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது என மாவட்ட காவல்துறை எஸ்.பி., நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த மோகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மே மாதம் பொதுமக்கள் ஊர்வலம் நடத்தினர். அப்போது போலீஸார் ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ மற்றும் அருணா ஜெகதீஷ் ஆணையம் விசாரணை செய்து வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது போலீஸார் பொய் வழக்குகளைப் பதிந்து துன்புறுத்தி வருகின்றனர். இதனால் தூத்துக்குடி பொதுமக்களின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது.

ஒரு மனிதன் தனது உரிமையைப் பெற போராடலாம் என சட்ட உரிமை கூறுகிறது. ஆனால் தூத்துக்குடி வட்டாரத்தில் கடந்த மூன்று மாதங்களாக பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட எவற்றுக்குமே போலீஸார் அனுமதி தருவதில்லை.

போராட்டம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி கோருபவர்கள் தேவையின்றி அலைக்கழிக்கப்படுவதுடன் போலீஸார் தொந்தரவு செய்கின்றனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அரசுக்கு எதிராக சிபிஐ, அருணா ஜெகதீஷ் ஆணையத்திடம் சாட்சி கூறுபவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்கின்றனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அரசுக்கு எதிராக சிபிஐ, அருணா ஜெகதீஷ் ஆணையத்திடம் சாட்சி கூறிய சந்தோஷ் ராஜ் என்பவர் மீது போலீஸார் பல பொய் வழக்குகளைப் பதிந்துள்ளனர். தூத்துக்குடி போலீஸார் சட்டப்படி முறையாக நடக்கவில்லை. தூத்துக்குடியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 24 மணி நேரமும் வழக்கறிஞர் குழு பணியில் இருக்க சட்ட உதவி மையத்தின் உறுப்பினர் செயலருக்கு உத்தரவிட வேண்டும்.

15.08.2018 முதல் 15.01.2019  வரை தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டவர்களுக்காக மூத்த வழக்கறிஞர் அடங்கிய குழுவினை தாலுக்கா அளவில் அமைக்க மாவட்ட சட்ட உதவி மையத்திற்கு உத்தரவிட வேண்டும்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது பொய் வழக்கு பதிந்து, சட்டவிரோதமாக கைது செய்வதை தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்", என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த மூன்று மாதங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் போராட்டம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி கோரியவர்கள் எவ்வளவு, எத்தனை போராட்டங்களுக்கு அனுமதி வழங்கபட்டது என மாவட்ட காவல்துறை எஸ்.பி., நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x