Published : 07 Jan 2019 10:24 AM
Last Updated : 07 Jan 2019 10:24 AM

நாடாளுமன்ற தேர்தலுடன், 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்துக: ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலுடன் இணைத்து காலியாக உள்ள 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழக சட்டப்பேரவையில், மொத்தம் காலியாக உள்ள 20 சட்டப்பேரவையில் தொகுதிகளுக்கும் சேர்த்து, ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தனிமைப்படுத்தி இடைத்தேர்தல் நடத்துவதில், சூட்சுமமான உள்நோக்கம் இருக்கலாம் என்று ஏற்கெனவே சொல்லி இருந்தேன்.

மேலும், திருவாரூரில் 'கஜா' புயல் தொடர்பான நிவாரணப் பணிகள் இன்னும் முழுமையடையாத நிலையில், அத்தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் என்பது, நிவாரணப் பணிகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு, பொதுமக்களின் அதிருப்தியும் கோபமும் அதிகமாகி, வாக்களிப்பதற்கு முழுவதும் எதிரான மனநிலை உருவாகிவிடும்; அப்படிப்பட்ட மனநிலை ஜனநாயகத்தை நிச்சயம் செழுமைப்படுத்தாது.

தேர்தலில் வெற்றி பெறுவது என்பதைவிட, 'கஜா' புயலால் கடுமையாகப்  பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் தொகுதி மக்களுக்கு உரிமையான நிவாரணப் பணிகள் தடைபட்டுவிடக்கூடாது என்பதுதான் திமுகவின் கருத்து. அனைத்துக் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதற்கு இணங்க, திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து அறிவித்திருக்கும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முடிவை அனைவரும் வரவேற்பார்கள்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் இணைத்து, 'மினி சட்டப்பேரவை தேர்தல்' என்று சொல்லுமளவுக்கு காலியாக உள்ள 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே நாளில் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக்கொள்கிறேன்" என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x