Published : 28 Dec 2018 02:14 PM
Last Updated : 28 Dec 2018 02:14 PM

சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சாத்தூரில், கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரத்தில் 4 வாரத்திற்குள் மத்திய, மாநில சுகாதாரத்துறை பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கடந்த மாதம் பரிசோதனைக்காகச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணிப் பெண்ணை சோதித்த அரசு மருத்துவர்கள், அவருக்கு ரத்தக் குறைபாடு உள்ளதாக கண்டறிந்தனர். அவருக்கு ரத்தம் ஏற்றுவதற்காக சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து ரத்தத்தைப் பெற்று அவருக்குச் செலுத்தப்பட்டது.

சில நாட்கள் கழித்து அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடல் நிலையில் திடீரென பாதிப்பு ஏற்பட்டதால் அந்த கர்ப்பிணிப் பெண் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது அவரைப் பரிசோதித்தபோது அந்தப் பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர்.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு கடந்த மாதம் ரத்தம் ஏற்றப்பட்டதால் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதாகத் தெரியவந்தது. சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், அங்குள்ள அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் ரத்த தானம் வழங்கியதும், அவரது ரத்தத்தைப் பரிசோதிக்காமல் அதை சேமித்து வைத்து அதை கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்றியதும் தெரியவந்தது.

இந்த விவகாரம் கடந்த மூன்று நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் அலட்சியமாகச் செயல்பட்ட 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாநில மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் 4 வாரத்திற்குள் இது குறித்து பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் ரத்த மாதிரிகளை மறு ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மறு ஆய்வு செய்த அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து மாநில சுகாதாரத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதவிர மாநில மனித உரிமை ஆணையமும் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய உள்ளதாக மனித உரிமை ஆணையர் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x