Published : 21 Dec 2018 08:33 AM
Last Updated : 21 Dec 2018 08:33 AM

மக்களவை தேர்தலிலும் மக்களின் பதிலடி தொடரும்: காங். பொதுச் செயலர் பி.சி.சாக்கோ உறுதி

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களைப்போல, மக்களவைத் தேர்தலிலும் பாஜகவுக்கு மக்களின் பதிலடி தொடரும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசியப் பொதுச் செயலரும், செய்தி தொடர்பாளருமான பி.சி.சாக்கோ கூறினார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மத்திய பாஜக அரசு பாதுகாப்புத் துறையில் மிகப் பெரிய ஊழல் புரிந்துள்ளது. ரஃபேல் போர் விமான ஒப்பந்தமே இதற்கு சாட்சி. மக்களவையில் கூட்டுக் கமிட்டி விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக விசாரிக்க வேண்டியது நாடாளுமன்ற கூட்டுக்குழு தான். உச்ச நீதிமன்றம் அல்ல. இந்த விவகாரத்தை பேசியே சமாளித்துவிடலாம் என பிரதமர் கருதுகிறார். நாட்டின் வளர்ச்சியில் அக்கறை இல்லாத அரசாக பாஜக திகழ்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது அளித்த எந்த வாக்குறுதியையும் பாஜக நிறைவேற்றவில்லை. மாறாக, பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வு என தினமும் மக்களை வதைக்கிறது.

தொழில் துறை வீழ்ச்சியடைந்ததால், ஏராள மானோர் வேலைவாய்ப்பு இழந்துவிட்டனர். லட்சக் கணக்கான இளைஞர்கள் வேலையின்றித் தவிக்கின் றனர். மக்களுக்கு உணவு வழங்கும் விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள். அனைத்து தரப்பு மக்க ளுக்கும் விரோதமாகச் செயல்படும் பாஜக அரசை அகற்றுவதே காங்கிரஸின் ஒரே இலக்கு. மக்களின் பாதுகாப்பு மற்றும் தேச வளர்ச்சியில் காங்கிரஸுக்கு எப்போதும் அக்கறை உண்டு.

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜகவுக்கு மக்கள் பதிலடி கொடுத்திருக்கிறார்கள். இது வரும் மக்களவைத் தேர்தலிலும் தொடரும். காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரே காங்கிரஸ் கட்சி முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x