Published : 08 Dec 2018 10:00 AM
Last Updated : 08 Dec 2018 10:00 AM

காணவில்லை என மனைவி புகார் அளித்த நிலையில்  பவர் ஸ்டார் சீனிவாசன் ஊட்டியில் இருப்பது தெரியவந்தது

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மாயமானதாக அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகார் தெரிவித்த சில மணி நேரத்தில் அவர் ஊட்டியில் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து புகார் திரும்ப பெறப்பட்டுள்ளது.

‘கண்ணா லட்டு திங்க ஆசையா’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் சீனிவாசன் என்ற ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன். இவர் அதற்கு முன்பு லத்திகா என்னும் திரைப்படத்தை தயாரித்து நடித்திருந்தார். ‘கோலி சோடா’ உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மற்றும் டெல்லி போலீஸாரால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார். பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மேலும் சில பண மோசடி வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் அண்ணா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இவரைக் காணவில்லை என மனைவி ஜுலி அண்ணாநகர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் தெரிவித்தார். அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அண்ணாநகர் போலீஸார் வழக்குப் பதிந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவர், ஊட்டியில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சில மணி நேரத்தில் புகார் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இதன் பின்னணி குறித்து போலீஸார் கூறும்போது, "வீட்டில் யாரிடமும் சொல்லாமால் திடீரென பவர் ஸ்டார் சீனிவாசன் ஊட்டிக்குச் சென்றுள்ளார். விசாரணையை தொடங்கிய சில மணி நேரத்தில் அவர் இருக்கும் இடம் தெரிந்து விட்டது.

அதைத் தொடர்ந்து அவரது மனைவி புகாரை திரும்ப பெற்றுக் கொண்டார்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x