Published : 06 Dec 2018 10:07 AM
Last Updated : 06 Dec 2018 10:07 AM

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது  சட்டத்துக்கு உட்பட்டே இந்து என்.ராம் கருத்து: உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி.டி.பெருமாள் வாதம்

நக்கீரன் கோபால் கைது செய்யப் பட்டபோது சட்டத்துக்கு உட்பட்டே இந்து என்.ராம் எழும்பூர் நீதி மன்றத்தில் தனது கருத்தை தெரிவித்தார் என உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி.டி.பெருமாள் வாதிட்டார்.

தமிழக ஆளுநர் குறித்து அவ தூறாக கட்டுரை வெளியிட்டதாக நக்கீரன் கோபாலை போலீஸார் கடந்த அக்டோபர் 9-ம் தேதி கைது செய்தனர். பின்னர் நக்கீரன் கோபால் எழும்பூர் 13-வது நீதித்துறை குற்றவியல் நடுவர் கோபிநாத் முன் ஆஜர்படுத்தப் பட்டார். அப்போது ஊடகப் பிரதிநிதியாக பத்திரிகையாளர் இந்து என்.ராம் ஆஜராகி, தனது கருத்துகளை தெரிவித்தார். அதையடுத்து குற்றவியல் நடுவர், ‘நக்கீரன் கோபாலை இதச பிரிவு 124-ன் கீழ் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது’ எனக்கூறி ரிமாண்ட் செய்ய மறுத்து விடுவித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து போலீஸார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ‘‘ நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டபோது எந்த சட்டத்தின் அடிப்படையில் ஊடகப் பிரதிநிதியாக இந்து என்.ராம் நீதிமன்றத்தில் கருத்து தெரிவிக்க அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்து சம்பந்தப்பட்ட எழும்பூர் குற்றவியல் நடுவர் பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நக்கீரன் தரப் பில் வழக்கறிஞர் பி.டி.பெருமாள் ஆஜராகி, ‘‘இந்த வழக்கில் ஊடகப் பிரதிநிதியாக இந்து என்.ராம் தனது கருத்துகளை சட்டத்துக்கு உட்பட்டே தெரிவித்தார். ஏனெனில் பத்திரிகை ஆசிரியர்களுக்கான கில்டில் இந்து என்.ராம் டிரஸ்டியாகவும் உள்ளார். வழக்கறிஞர்கள் சட்டத்தில் பிரிவு 32-ல் வழக்கறிஞர் அல்லாத ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகி தனது கருத்துகளை தெரிவிக்கலாம் என தெளிவாக உள்ளது. அதேபோல உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் தனது தீர்ப்பிலும் இதுதொடர்பாக விளக்கியுள்ளார்.

நீதிமன்றத்தில் பார்வை யாளராக நின்றுகொண்டிருந்த இந்து என்.ராமிடம், குற்றவியல் நடுவர், உங்கள் இதழில் இதுபோல அட்டைப்படம் போடுவீர்களா என கேள்வி எழுப்பியதால்தான் அவர் தனது கருத்துகளை பதிவு செய்தார். அப்போதும், நான் வழக்கறிஞர் அல்ல எனக் கூறிக்கொண்டுதான் பேசினார். இந்த வழக்கில் இதச பிரிவு 124 முதன்முறையாக ஊடகங்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது தவறு என சுட்டிக்காட்டி ஒரு ஊடகப் பிரதிநிதியாகத்தான் அவர் பேசினார். இதில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை. அதை அந்த குற்றவியல் நடுவரும் பதிவு செய்துள்ளார். மேலும் எந்தவொரு நீதிமன்ற நடைமுறைகளும் மீறப்படவில்லை. போலீஸார் பதிவு செய்த சட்டப்பிரிவை சுட்டிக்காட்டித்தான் குற்றவியல் நடுவரும் நக்கீரன் கோபாலை ரிமாண்ட் செய்ய மறுத்தார். எனவே இதற்கு எதிராக தொடரப்பட்டுள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி இந்த வழக்கின் தொடர் வாதத்துக்காக விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x