Published : 22 Dec 2018 08:49 AM
Last Updated : 22 Dec 2018 08:49 AM
புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட தனது வாடிக்கையாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக வைத்திருந்த கடனை டீ கடைக்காரர் ஒருவர் தள்ளுபடி செய்துள்ளது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மாங்கனாம்பட்டியைச் சேர்ந்தவர் எஸ்.சிவக்குமார். இவர், விவசாயம் செய்து வந்தார். பின்னர், கிணற்றில்தண்ணீர் வற்றிவிட்டதால் வம்பன் 4 சாலை பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு டீ கடையை தொடங்கினார். அப்போது, ஒரு டீயை ரூ.4-க்கு விற்பனை செய்த இவர், தற்போது ரூ.6-க்கு விற்பனை செய்கிறார். பார்சல் டீ மட்டும் ரூ.8.கஜா புயலின்போது நிலைகுலைந்து நின்ற மக்களுக்காக ஒருநாள் முழுவதும் இலவசமாக டீ விநியோகித்துள்ளார். அதன் பிறகு, வாடிக்கையாளர்கள் கொடுக்கும் காசை வாங்கிக்கொண்டு டீ கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்டவர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு, டீ குடித்துவிட்டு கடன் வைத்துள்ள வாடிக்கையாளர்களின் டிச.18-ம் தேதிவரையிலான கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்து அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பை அச்சிட்டு கடையில் தொங்கவிட்டுள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடனை அரசே தள்ளுபடி செய்யாத நிலையில், சாதாரண டீ கடைக்காரர் தள்ளுபடி செய்திருப்பது அவரிடம் டீ குடித்துவிட்டு கடன் வைத்திருந்த வாடிக்கையாளரிடம் மட்டுமின்றி, அப்பகுதி மக்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து சிவக்குமார் கூறியதாவது: இப்பகுதி மக்கள் விவசாயம், கட்டுமானப் பணி போன்ற அன்றாட கூலி வேலை செய்தும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். கஜா புயலுக்குப் பிறகு இப்பகுதி மக்கள் ஒரு டீ குடிப்பதற்குகூட யோசிக்க வேண்டிய நிலைக்கு அவரவர் வீடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடைக்கு வரும் ஒவ்வொருவரும் தன்னுடைய பாதிப்பு குறித்து மற்றவர்களிடம் வேதனையுடன் தெரிவிப்பதை என்னால்காதுகொடுத்துக் கேட்க முடியவில்லை. புயல் தாக்கியதற்கு மறுநாள் கடைக்கு வரும் அனை வருக்கும் இலவசமாக டீ போட்டுக்கொடுத் தேன். அதன் பின்னர், குறைந்த தொகையைக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வேன்.
மாதாமாதம் கணக்கு பார்த்து பணம் கொடுப்போருக்கு மட்டும்தான் கடன் என கணக்கு எழுதி வைப்பேன். கடை தொடங்கிய காலத்தில் சிலர் கடன் சொல்லிவிட்டு டீ குடித்த கணக்கையும் சேர்த்து, சில ஆண்டுகளாக வாடிக்கையாளர்கள் டீ குடித்த கடன் முழுவதையும் தள்ளுபடி செய்துள்ளேன். ஒவ்வொருவருக்கும் அது சொற்ப ரூபாய்தான் என்றாலும்கூட, என்னால் முடிந்ததை செய்தது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
8 ஆண்டுகளுக்கு முன்பு கடை தொடங்கியது முதல் கடன் வைத்துவிட்டு பல முறை கேட்டு கிடைக்காத, கடன் வைத்தவர்களே மறந்துவிட்ட தொகை உட்பட நான் தள்ளுபடி செய்தது மொத்தம் சுமார் ரூ.10 ஆயிரம்தான் இருக்கும் என்றாலும், என்னால் முடிந்ததை இம்மக்களுக்கு செய்துள்ளேன் என்பது மனதுக்கு திருப்தியாக உள்ளது என்றார்.
ஏழை, எளிய மக்களின் வேதனையை உணர்ந்து ஒரு டீ கடைக்காரர் செய்திருப்பதைப் பார்த்தாவது ஆட்சியாளர்களும் மனமிரங்கி, புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின், மக்களுக்கு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென்பதே புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT