Published : 22 Dec 2018 05:22 PM
Last Updated : 22 Dec 2018 05:22 PM

குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பொங்கல் பரிசு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தைப்பொங்கல் திருநாள் உலகமெங்கும் வாழும் தமிழர்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. விவசாயிகள், இயற்கையின் அருளினாலும், தங்கள் கடின உழைப்பாலும் விளைந்த நெற்கதிர், கரும்பு, வாழை, இஞ்சி, மஞ்சள் ஆகிய பொருட்களை இறைவனுக்குப் படைத்து வழிபட்டு, தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கின்றார்கள்.

புது அரிசி கொண்டு பொங்கலிடும் இந்நன்னாளில் அனைவரின் வாழ்வில் அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் பெருக மனமார வாழ்த்துகிறேன். அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி,  20 கிராம் உலர் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 

இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பு, பொங்கல் திருநாளுக்கு முன்னரே சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும். 

தமிழக அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பயன்பெற்று பொங்கல் திருநாளை பாரம்பரிய முறைப்படி சீரோடும் சிறப்போடும் கொண்டாட வழிவகுக்கும். இப்பயனைப் பெற்று பொங்கல் திருநாளை தமிழ்நாடு மக்கள் இனிதே கொண்டாடி மகிழ வாழ்த்துகிறேன்" என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x