Last Updated : 08 Apr, 2014 12:00 AM

 

Published : 08 Apr 2014 12:00 AM
Last Updated : 08 Apr 2014 12:00 AM

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: 3 வாரங்கள் நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை 3 வாரங்கள் நிறுத்திவைக்க உச்ச நீதி மன்றம் நேற்று உத்தரவிட்டது.

நீதிபதிகள் பி.எஸ். சவுகான், ஜெ.செலமேஸ்வர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் அரசு தரப்பு வழக்கறிஞரான பவானி சிங் அண்மையில் நடை பெற்ற விசாரணையின்போது ஆஜராக வில்லை. இதுதொடர்பாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ரூ.65,000 அபராதம் விதித்தது.

இதை எதிர்த்து அவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் பவானி சிங் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி.எஸ். சவுகான், ஜெ. செலமேஸ்வர் ஆகியோர் அடங் கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

பவானிசிங் சார்பில் மூத்த வழக்கறிஞர் நாகேந்திர ராய் ஆஜராகி வாதிட்டார்.

“அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை, தற்போதும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மேலும் 3 வாரங்கள் அவருக்கு அவகாசம் அளிக்க வேண்டும், அது வரை வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று நாகேந்திர ராய் கோரினார்.

அப்போது நீதிபதி செலமேஸ்வர் கூறியதாவது: உடல்நிலை பாதிக்கப் பட்டிருந்தால் நீங்கள் (பவானி சிங்) மற்றவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி விடலாம், வழக்கு விசாரணையை ஏன் தாமதப்படுத்த வேண்டும்? இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் முறையாக மனு செய்து புதிய அரசு வழக்கறிஞரை நியமிக்கக் கோரலாம் என்றார்.

இதேபோல் உடல்நிலையைக் காரணம் காட்டி இனிமேல் வழக்கு விசாரணையை தாமதப்படுத்தக் கூடாது என்று கண்டிப்புடன் கூறிய நீதிபதிகள், முதல்வர் ஜெய லலிதா சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை 3 வாரங்கள் நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x