Published : 25 Dec 2018 11:11 AM
Last Updated : 25 Dec 2018 11:11 AM

வங்கி ஊழியர்கள் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவும், வங்கிகள் தொடர்ந்து இயக்கப்படவும், பொது மக்களுக்கான வங்கிச்சேவை தொடரவும் வங்கி ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் மத்திய பாஜக அரசு உடனடி பேச்சு வார்த்தை நடத்தி சுமூகத்தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘மத்திய பாஜக அரசு  நாடு முழுவதும் கடந்த 21-ம் தேதி வங்கி உழியர்களின் வேலை நிறுத்தத்தால் பொது மக்களுக்கான வங்கிச்சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டு உடனடி பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்து 26.12.2018 அன்று நடைபெற இருக்கின்ற வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர சுமூகத் தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும்.

அதாவது வங்கி ஊழியர்கள் சங்கம் - ஊதிய உயர்வு வழங்கவும், ஓய்வூதியம் அளிப்பதில் பழைய முறையை கடைபிடிக்கவும், வங்கிகள் இணைப்புக்கூடாது என்பதையும் வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பலகட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஆனால் இவர்களின் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாத காரணத்தால் வங்கி ஊழியர்கள் சங்கம் தொடர்ந்து வேலை நிறுத்தத்தை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை இணைக்க ஆரம்பம் முதலே வங்கி ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் - வங்கிகளுக்கு வாராக்கடனாக ஏதேனும் இருப்பின் அதனை வசூல் செய்ய வேண்டிய நியாயமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம், வங்கியை இலாபகரமாக இயக்க உயர் அதிகரிகளிடம் ஆலோசனைகளை மேற்கொள்ளலாம், முதலாளிகளுக்கு கடன் கொடுத்ததில் அதிக கவனம் செலுத்தி வசூல் செய்ய வேண்டிய தீவிர நடவடிக்கைகளை எடுக்கலாம். இதனை விடுத்து நல்ல நிலையில் இயக்கப்படுகின்ற இரண்டு வங்கிகளையும், சற்று தொய்வான நிலையில் இயக்கப்படுகின்ற ஒரு வங்கியையும் இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்வதை வங்கி உழியர் சங்கங்கள் ஏற்க முன்வரவில்லை.

இந்நிலையில் தான் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் கடந்த காலங்களில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக கடந்த 21 ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற வங்கி ஊழியர்கள், நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு மற்றும் தனியார் வங்கிகளின் ஊழியர்கள் சுமார் 10 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவது வங்கிச்சேவையை பெரிதும் நம்பியுள்ள சாதாரண ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். வங்கிச்சேவை முடங்கும் போது வணிகர்கள், சிறு குறு தொழில் நிறுவனங்களின் வங்கிப்பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும். அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் நாளை மறுநாள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு எடுத்துள்ளதால் அன்றைய தினம் வங்கிகள் செயல்படுத்தப்படாத நிலை ஏற்படும். நாட்டில் பொதுத்துறை வங்கிகளின் சேவையானது தொய்வில்லாமல், தடையில்லாமல், தொடர்ந்து சிறப்பாக, முறையாக இருக்க வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த மக்களின் எண்ணமாகும்.

பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை அனைவரின் நியாயமான கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அரசுக்கு உண்டு. எனவே நாளை நடைபெற இருக்கின்ற வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் நடைபெறாமல் இருக்கவும், வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவும், வங்கிகள் தொடர்ந்து இயக்கப்படவும், வங்கி ஊழியர்களின் நலன் காக்கவும், பொது மக்களுக்கான வங்கிச்சேவை தொடரவும் வங்கி ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் உடனடி பேச்சு வார்த்தை நடத்தி, சுமூகத் தீர்வு காண மத்திய பா.ஜ.க அரசு முன்வர வேண்டும் என்று தமாகா சார்பில் வலியுறுத்துகிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x