Published : 29 Nov 2018 09:27 AM
Last Updated : 29 Nov 2018 09:27 AM

சென்னை மாநகராட்சியின் லஞ்ச ஒழிப்புப் பிரிவை கலைக்கும் உத்தரவுக்கு தடை

சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்த லட்சுமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தனது வீட்டின் முன்பாக உள்ள மாநகராட்சி சாலையை சிலர் ஆக்கிரமித்து தனியார் மருத்துவமனைக்கான ஜெனரேட்டரை வைத்துள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை’’ எனவும் தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், சென்னை மாநகராட்சியில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடைபெறுவதில்லை என கண்டனம் தெரிவித்து, மாநகராட்சி லஞ்ச ஒழிப்பு பிரிவில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் கூண்டோடு மாற்ற கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி உத்தரவிட்டு இருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து மாநகராட்சி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர் வில் நடந்தது. அப்போது தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குப் பிறகு மாநகராட்சியில் என்னென்ன சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

லஞ்சப் புகாரில் சிக்கும் அதிகாரிகளை குறைந்தபட்சம் ஒரு வருடமாவது தண்டிக்க வேண்டும். சென்னையில் திரும்பிய பக்கம் எல்லாம் விதிமீறல் கட்டிடங்கள் உள்ளன. நீதிமன்றம் உத்தரவிட்டபிறகுதான் அவற்றை இடிக்க வேண்டுமென்பதில்லை. அதிகாரிகளே நேரடியாக நடவடிக்கையில் இறங்கலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, மாநகராட்சி லஞ்ச ஒழிப்பு பிரிவில் தற்போது 3 அதிகாரிகள் மட்டுமே உள்ளனர்.

விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அதிகாரிகள் முறையாக நிறைவேற்றி வருகின்றனர். தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் ஒரு பகுதியை மட்டுமே எதிர்ப்பதாகவும் மற்ற உத்தரவுகளை பின்பற்றுவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘மாநகராட்சியின் லஞ்ச ஒழிப்பு பிரிவை கூண்டோடு கலைத்து விட்டு புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும்’’ என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x