Published : 02 Nov 2018 02:24 PM
Last Updated : 02 Nov 2018 02:24 PM

தீபாவளி அன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும்: வானிலை ஆய்வு மையம்

 

வரும் 6-ம் தேதி தெற்கு வங்கக்கடலின் மத்தியப்பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஸ்டெல்லா அளித்த பேட்டி:

“நேற்று கடலோர தமிழகம், தெற்கு உள் தமிழகம், புதுவை, மற்றும் தெற்கு கடலோர ஆந்திராவில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை இன்று தமிழகத்தின் இதரப்பகுதிகள் மற்றும் தமிழகத்தை ஒட்டியுள்ள தெற்கு உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் கேரளாவிலும் தொடங்கி உள்ளது.

வளிமண்டலத்தில் காற்றின் மேலடுக்கு சுழற்சி தென் தமிழகம் மற்றும் குமரிப்பகுதியில் நிலவுவதால் அடுத்த 2 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.

தெற்கு வங்கக்கடலின் மத்தியப்பகுதியில் வரும் 6-ம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் மழைபெய்துள்ளது. குறிப்பாக டெல்டா பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

வேதாரண்யம் 15 செ.மீ. நாகை 14 செ.மீ. திருத்துறைப்பூண்டி 13 செ.மீ. மயிலாடுதுறை 9 செ.மீ. அளவிலும், காரைக்கால், நன்னிலம், பாம்பன், ராமேஷ்வரம் மற்றும் இதரப் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த வரும் 24 மணி நேரத்திற்கு அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில நேரம் மிதமான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.”

இவ்வாறு ஸ்டெல்லா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x