Published : 14 Nov 2018 08:30 AM
Last Updated : 14 Nov 2018 08:30 AM

சுங்கச்சாவடியில் லாரிகளிடம் நூதன முறையில் பணம் கொள்ளை: உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

சுங்கச் சாவடிகளில் கனரக லாரி களிடம் நூதன முறையில் பணம் கொள்ளை அடிக்கப்படுவதாக உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து தீப்பெட்டி, கடலைமிட்டாய், பட்டாசுகள், ஜவுளி ரகங்கள், மஞ்சள், பருப்பு வகைகள், உப்பு என பல்வேறு பொருட்கள் வெளி மாநிலங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த லாரிகள் ஒவ்வொரு சுங்கச்சாவடிகளில் நின்று பணம் செலுத்த அதிக நேரம் ஏற்பட்டது. போக்குவரத்து நெருக்கடியும் உருவாகிறது.

இதற்கு தீர்வு காணும் பொருட்டு, மத்திய அரசு கடந்த 2017 டிசம்பரில் ஃபாஸ்டாக் (Fastag) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில் வங்கிகளில் கணக்கு தொடங்கி, அதில் பணம் செலுத்தியிருக்க வேண்டும். இத்திட்டத்தில் இணைந்துள்ள லாரிகளில் குறிப்பிட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். இதனால், அந்த லாரி சுங்கச்சாவடியில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. சுங்கக் கட்டணம் ஆன்லைனில் பிடித்தம் செய்தது குறித்து, லாரி உரிமையாளருக்கு குறுந்தகவல் அனுப்பப்படும்.

இத்திட்டத்தில் பண மோசடி நடப்பதாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் பூ.கணேஷ்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். இவர், தனது உறவினருடன் சேர்ந்து 17 கனரக லாரிகள் வைத்துள்ளார்.

இதுகுறித்து கணேஷ்குமார் கூறும்போது, ``தீபாவளியை முன்னிட்டு எங்களின் 3 லாரிகள்தூத்துக்குடியில் நிறுத்தப்பட்டிருந் தன. நவ.8-ம் தேதி இந்த 3 லாரிகளும் ஆந்திர மாநிலம் சிம்ஹாபூர் எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள டாங்காடூர் சுங்கச்சாவடியை கடந்து சென்றதாகவும், தலா ரூ.405 பிடித்தம் செய்யப்பட்டதாகவும், குறுஞ்செய்தி வந்தது.

உடனடியாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இலவச புகார் எண்ணில் பேசினேன். இவ்வாறு நடக்காது என அவர்கள் மறுத்தனர். உடனடியாக லாரியை எடுத்துக்கொண்டு சாத்தூர் சுங்கச்சாவடியை கடந்து சென்று நிறுத்தி, மீண்டும் ஆணையத்தை தொடர்பு கொண்டு கேட்டேன்.

டாங்காடூர் சுங்கச்சாவடியில் பகல் 12.55 மணிக்கும், இரவு 7 மணிக்கு சாத்தூரிலும் பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 900 கி.மீ. தூரத்தை எப்படி 6 மணி நேரத்தில் கடக்க முடியும்? என கேட்டேன். இ-மெயிலில் புகார் அனுப்பக் கூறினர். ரூ.405 என்பது பெரிய தொகை கிடையாது. ஆனால், ஒரு நாளைக்கு 10 பேரிடம் பணம் எடுத்தால், ஒரு மாதத்துக்கு அந்த சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்துவிடலாம் என்றார்.

விளாத்திகுளத்தை சேர்ந்த கனரக லாரி ஓட்டுநர் சண்முகராஜ் கூறும்போது, ``டாங்காடூர் சுங்கச்சாவடியில் ஏடிஎம் கார்டை ஸ்வைப் செய்தேன். சரியாக ஸ்வைப் செய்யவில்லை எனக்கூறி, மீண்டும் பாஸ்வோர்டு டைப் செய்யக் கூறினர். நாங்கள் சுங்கச்சாவடியை கடந்த சிறிது நேரத்தில் எனது கணக்கில் இருந்து இரண்டு முறை பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதுகுறித்து அந்த சுங்கச்சாவடியில் புகார் தெரிவித்தேன். ஆனால், பணம் திரும்பி வரவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x