Published : 16 Nov 2018 02:32 PM
Last Updated : 16 Nov 2018 02:32 PM

கஜா புயல்: சேத விபரங்கள் விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்; தமிழக அரசு அறிவிப்பு

'கஜா' புயலினால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து விரிவான அறிக்கை உள்துறை அமைச்சகத்துக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், 'கஜா' புயலினால் தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'கஜா' புயல் தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், தற்போது 'கஜா' புயலினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், போர்க்கால அடிப்படையில் நடைபெறும் நிவாரணப் பணிகள் குறித்தும் விளக்கமாக மத்திய உள்துறை அமைச்சரிடம் எடுத்துரைத்தார்.

மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து 471 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 82 ஆயிரம் பொதுமக்களுக்கு உணவு, உடை, மருத்துவ வசதிகள் உட்பட செய்யப்பட்டு வரும் அனைத்து நிவாரணப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

'கஜா' புயலினால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து விரிவான அறிக்கை உள்துறை அமைச்சகத்துக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x