Last Updated : 07 Nov, 2018 05:03 PM

 

Published : 07 Nov 2018 05:03 PM
Last Updated : 07 Nov 2018 05:03 PM

தீபாவளி அன்று விருதுநகரில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 6 பேர் கைது

 

விருதுநகரில் தீபாவளி அன்று கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற 2 பேரும், அவர்களுடன் தொடர்புடைய 4 பேரும் என கள்ளநோட்டு கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் முக்கிய வீதிகளில் உள்ள கடைகளில் தீபாவளி அன்று இரவு 3 ஆயிரத்து 400 ரூபாய் கள்ள நோட்டுகளை சிலர் மாற்ற முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த விருதுநகர் மேற்கு போலீஸார் கடை வீதிகளில் ரகசியக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, கள்ள நோட்டுகளை கடைகளில் மாற்ற முயன்ற சூர்யா, கோபிநாத் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் மதுரை மாவட்டம் துவரிமானி பகுதியில் சிலர் லட்சக்கணக்கான கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. அதையடுத்து, துவரிமானில் குறிப்பிட்ட இடத்தில் போலீஸார் திடீர் சோதனை நடத்தியபோது மதுரை மாவட்டம் கொக்கலாஞ்சேரியைச் சேர்ந்த திருவாசகம், முருகன், செவல்பட்டி முருகன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 36 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கள்ள ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கப் பயன்படுத்திய 2 பிரிண்டர்கள், 4 செல்போன்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், கள்ள நோட்டு கும்பலைச் சேர்ந்த நபர்கள் வேறு மாவட்டங்களில் உள்ளனரா என்பது குறித்தும் விருதுநகர் மேற்கு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x