Published : 27 Nov 2018 09:34 AM
Last Updated : 27 Nov 2018 09:34 AM

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி மதிமுக நடத்தும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்துக்கு திமுக ஆதரவு: வைகோவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி, டிசம்பர் 3-ம் தேதி மதிமுக நடத்தும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்துக்கு திமுக ஆதரவளிக்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் முன்விடுதலை செய்யலாம் என ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்தது. ஆனால், ஆளுநர் எந்த முடிவையும் எடுக்காமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் 7 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும், முடிவெடுக்காமல் இருக்கும் ஆளு நர் பன்வாரிலால் புரோஹித்தைக் கண்டித்தும், டிசம்பர் 3-ம் தேதி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என மதிமுக, திராவிடர் கழகம் ஆகியவை அறிவித்துள்ளன.

இந்தப் போராட்டத்துக்கு ஆதர வளிக்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார்.

இதற்குப் பதிலளித்து வைகோ வுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப் படையில் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின்படி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது திமுகவின் உறுதியான நிலைப்பாடாகும். அமைச்சரவை தீர்மானத்தின்படி 7 பேரையும் விடுதலை செய்யாமல் மனிதநேயமின்றி காலம் தாழ்த்திவரும் தமிழக ஆளுநரின் செயல் கடும் கண்டனத்துக்குரியது.

ஆளுநரின் காலதாமதத்தைக் கண்டித்து மதிமுகவும், திராவிடர் கழகமும் இணைந்து, டிசம்பர் 3-ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்த இருப்பது பாராட்டுக்குரியது. இந்தப் போராட்டத்தை வரவேற்கிறேன். இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161-ன்படி 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இதற்காக நடைபெறும் போராட்டத்துக்கு திமுக முழு ஆதரவு அளிக்கும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x