Published : 13 Nov 2018 01:28 PM
Last Updated : 13 Nov 2018 01:28 PM

யானைக்கவுனியில் செல்போன் ஊழியரை தாக்கி 10 லட்சம் வழிப்பறி: 3 பேர் கைது ரூ. 9.5 லட்சம் பறிமுதல்

ஏழுகிணறு பகுதியில் நேற்றிரவு செல்போன் கடை ஊழியரைத் தாக்கி வழிப்பறி செய்த கும்பல் ரூ.60 லட்சத்தை பறித்துச் சென்ற வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்

சென்னை ஏழுகிணறு பாளையப்பன் தெருவில் வசிப்பவர் ரபீக்கான் (36). இவர் ஏழுகிணறு கிரிகோரி தெருவில் வசிக்கும் ஜாபர் (32) என்பவரிடம் பணியாற்றுகிறார். ஜாபர் அமேசான் நிறுவனத்திடம் செல்போன்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வரும் ஏஜென்சி நடத்தி வருகிறார்.

ஜாபர் நிறுவனத்தில் வசூலாகும் பணத்தை வங்கியில் கட்டுவது, உதிரிப்பொருட்களை வாங்கி வருவது போன்ற பணிகளை ரபீக்கான் செய்து வருகிறார். இதற்காக இவரிடம் லட்சக்கணக்கில் பணம் எப்போதும் புழங்கும்.

இதேபோன்று கடந்த 1-ம் தேதி வழக்கம்போல் ஜாபர் தனது வியாபாரம் சம்பந்தமாக ரபீக்கானிடம் ரூ. 10 லட்சம் பணத்தைக் கொடுத்து அனுப்பியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர் தனது ஹோண்டா ஆக்டிவா வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

இரவு சுமார் 10.30 மணி அளவில் ஏழுகிணறு பெரியண்ணா முதலி தெரு சந்திப்பு அருகே ஹோண்டா ஆக்டிவாவில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த டியூக் மற்றும் பல்சர் இரு சக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் ரபீக்கானை மடக்கிப் பணத்தைக் கேட்டுள்ளனர்.

ரபீக்கான் தர மறுக்கவே கத்தியால் அவரது வலது கை மணிக்கட்டில் வெட்டியுள்ளனர். இதனால் வெட்டுப்பட்ட ரபீக்கான் அலறியுள்ளார். அவரைக் கீழே தள்ளிவிட்டு அவரிடமிருந்து ரூ.10 லட்சம் பணத்தை அந்தக் கும்பல் பறித்துச் சென்றது.

ரத்தவெள்ளத்தில் துடித்த ரபீக்கான் மின்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். சம்பவ இடத்திற்கு வந்த ஏழுகிணறு போலீஸார் விசாரணை நடத்தினர். வழிப்பறி நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரபீக்கான் பணத்தைக் கொண்டு செல்வதைத் தொடர்ந்து கண்காணித்த யாரோ இந்த வழிப்பறியைச் செய்திருக்கவேண்டும் என்று போலீஸார் கருதுகின்றனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீஸார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தபோது அதில் பதிவான காட்சிகளை வைத்து மோட்டார் சைக்கிளை வைத்து குற்றவாளி கிஷோர் என்பவரை முதலில் பிடித்துள்ளனர்.

பின்னர் அவர் கொடுத்த தகவலின்பேரில் சதீஷை பிடித்துள்ளனர். சதீஷிடமிருந்து ரூ.9.5 லட்சம் பணத்தை மீட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய டியூக் மோட்டார் சைக்கிளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த கூடுதல் ஆணையர் தினகரன் கூறியதாவது:

லோக்கல் ஆள் நேட்டிவ் ராயபுரம். பர்மா பசாரில் சிடி விற்றவர். இந்த ஏரியாவில் கேஷ் ட்ரான்சாக்‌ஷன் அதிகம் இருக்கு என்று கூறி பணம் வழிப்பறி செய்துள்ளனர். இவர் மீது ஏற்கெனவே சிடி கேஸ் ஒன்று உள்ளது. குண்டாசிலும் போயுள்ளார். இதேபோன்று இன்னொரு கேங்கும் உள்ளது. அவர்களையும் பிடிக்க முயற்சி நடக்கிறது.

100 சதவிகித சிசிடிவி கேமரா இருக்கும்போது அவர்களை அடையாளம் காண ஏன் பிரச்சினை. இரவு 10 மணிக்கு மேல் இருட்டான நிலையில் கேமரா சரியாக கவர் செய்ய முடியவில்லை. மேலும் லேசாக மழை தூறிக்கொண்டிருந்ததால் அதன் தாக்கத்தினால் அவர்கள் உருவம் பதிவாவதில் சிக்கல் ஏற்பட்டது.

உடன் இருந்த கூட்டாளிகள் யார்?

கிஷோர் என்பவர் பைக் ஓட்டுகிறார். பைக் ஓட்டணும் உனக்கு பணம் தருகிறேன் வா என்று அழைத்துச் சென்றுள்ளனர். அவர் வேலை பைக்கை வேகமாக ஓட்டவேண்டும் அவ்வளவே. இன்னொருவர் சதீஷ் என்பவர் அவர் வேலை பணப்பையை மிரட்டி பறிக்க வேண்டும் ஷேக் இன்பார்மராக இருந்தார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x