Published : 15 Nov 2018 06:38 PM
Last Updated : 15 Nov 2018 06:38 PM
நெல்லையில் கோயில் சிலைகள் திருடப்பட்ட வழக்கில் திருச்சி மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பியை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் சென்னையில் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் பழவூரில் உள்ள நாறும்பூநாதர் கோயிலில் கடந்த 2005-ம் ஆண்டு ஆனந்த நடராஜர் சிலை உட்பட 13 சிலைகள் திருடப்பட்டன. இந்த வழக்கை அப்போதைய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பிக்களான காத்திஃப், காதர்பாஷா மற்றும் காவல் ஆய்வாளர் ஜீவானந்தம் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது இந்த சிலைகளை, சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் மும்பையைச் சேர்ந்த வல்லப பிரகாஷ் என்பவர் மூலமாக லண்டனுக்குக் கடத்தி அங்கு சுபாஷ் கபூர் என்பவரின் அருங்காட்சியகத்துக்கு விற்றது தெரியவந்தது. தீனதயாளனைக் கைது செய்யாமல் இருக்க போலீஸார் பெருமளவில் பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
வழக்கை ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் விசாரணைக்கு ஏற்றதைத் தொடர்ந்து தீனதயாளன், வல்லப பிரகாஷ், சுபாஷ் கபூர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் டிஎஸ்பிக்கள் காத்திஃப், காதர் பாட்ஷா, காவல் ஆய்வாளர் ஜீவானந்தம் ஆகியோரும் சிலை கடத்தல் வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். டிஎஸ்பி காத்திஃப் ஓய்வு பெற்று விட்டார். டிஎஸ்பி காதர் பாஷா சிலை கடத்தல் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார்.
சிலை கடத்தல் பிரிவிலிருந்து மாற்றப்பட்டு பின்னர் சென்னை மாதவரத்தில் மாநகர போக்குவரத்துக் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த ஜீவானந்தம் பதவி உயர்வு பெற்று திருச்சி மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் விசாரணைக்கு ஆஜராகுமாறு டிஎஸ்பி ஜீவானந்தத்துக்கு சம்மன் அனுப்பினர். விசாரணைக்கு நேற்று ஆஜரான டிஎஸ்பி ஜீவானந்தத்தை கைது செய்வதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் அறிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT