Published : 17 Nov 2018 07:51 AM
Last Updated : 17 Nov 2018 07:51 AM
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 41 ஆண்டுகளுக்கு பிறகு அடித்த புயலில், ரயில் நிலையத்தின் மேற்கூரை அடித்துச் செல்லப்பட்டது வருத்தமளிக்கிறது என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
நாகையில் நேற்று முன்தினம் இரவு அடித்த கஜா புயலால் ரயில் நிலையத்தின் மேற்கூரையில் உள்ள தகடுகள் காற்றில் பறந்தன. இது பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய மீனவர் சங்க தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நகர தலைவருமான கீச்சாங்குப்பம் ராஜேந்திரன் கூறியதாவது:
நாகை ரயில் நிலையம் பிரிட்டிஷ் காலத்தில் அமைக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தமிழகத்தில் இருந்து விலை மதிக்க முடியாத பொருட்களை கொண்டு செல்வதற்காக ரயில் நிலையங்களை அமைத்தார்கள். இருப்பினும் பொதுமக்களும் பெருமளவில் பயன்பெற்றனர்.
நாகை மாவட்டம் ஆண்டுதோறும் பேரிடரால் பாதிக்கப்படும் மாவட்டம். நாகை மாவட்டத்தைப் பொறுத்தவரை 1952, 1963, 1977, 1991 ஆகிய 4 ஆண்டுகளில் கடுமையான புயல் பாதிப்பை சந்தித்துள்ளோம். 11.11.1977 அன்று நாகையை புயல் தாக்கியபோது, நாகை ரயில் நிலையத்தின் மேற்கூரையில் ஒரு தகடுகூட மிஞ்சவில்லை. தற்போது விஞ்ஞானம் வளர்ந்து விட்டதாக சொல்கிறார்கள். புயல் இந்த திசையில் உருவாகி இருக்கிறது. இப்படி நகரும், இத்தனை கிலோமீட்டர் வேகத்தில் காற்று அடிக்கும். இந்த இடத்தில் கரையை கடக்கும் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் மக்களை பாதுகாப்பதிலோ, அரசு மற்றும் பொதுமக்களின் சொத்துகளை பாதுகாப்பதிலோ எந்த வளர்ச்சியும் இல்லை.
27 ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கிய கஜா புய லால் நாகை ரயில் நிலையத்தின் மேற்கூரை பாதிக்கப்பட்டிருப்பது உண்மையிலேயே வேதனை அளிக்கிறது.
காற்றில் பறந்த தகடு களால் யாரும் பாதிக்கப்படவில்லை என்பது சற்றே ஆறுதலான விஷயம். மக்களை வரும் முன் காப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
நாகை வெளிப்பாளையம் காடம்பாடியைச் சேர்ந்த குமரவேல் கூறியதாவது:
பிரிட்டிஷ் காலத்தில் தொடங்கப்பட்ட மிகப் பழமையான ரயில் நிலையம் இது. அந்தக் காலத்தில் உறவினர்கள் வரும்போது, ரயில் நிலையத்துக்கு சென்று உறவினர்களை மாட்டு வண்டியில் அழைத்து வருவோம். விடுமுறை நாட்களில் நண்பர்களோடு ரயில் நிலையத்தில்தான் பொழுதைப் போக்குவோம்.
1977-ம் ஆண்டு ஏற்பட்ட புயலில் நாகை ரயில் நிலையம் பாதிக்கப்பட்டபோது எங்களால் ஆன உதவிகளை செய்திருக்கிறோம்.
தற்போது கஜா புயலில் மேற்கூரை பறந்து விட்டது என்பது மனதுக்கு ரொம்ப வேதனை தருவதாக இருக்கிறது. அதை உடனடியாக சரி செய்தால் பயணிகளுக்கு உதவியாக இருக்கும் என்றார்.
நடைமேடையில் உள்ள மேற்கூரை பெயர்ந்தது
1952-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாகைக்கு தென்கிழக்கே வங்கக் கடலில் 100 மைல் தொலைவில் உருவான புயல், நாகையை 111 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்தது. அப்போது கடும் மழைப் பொழிவும் இருந்தது. கடுமையான காற்று காரணமாக நாகை நகரமே பெரும் சீரழிவுக்குள்ளானது.
இதேபோன்று 1977-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வங்கக் கடலில் உருவான புயல் ஏறத்தாழ 100 கிலோ மீட்டர் வேகத்தில் நாகையை கடந்தது. அப்போது நாகை மற்றும் வேதாரண்யம் பகுதிகளில் கடுமையான மழையும், காற்றும் வீசியது. இதனால், வீடுகள், மரங்கள், வேளாண் பயிர்கள் பெருமளவு சேதமடைந்தன.
இந்த இருபுயல்களிலும் பழமையான நாகை ரயில் நிலையம் பெரும் பாதிப்புக்குள்ளானது. அதேபோன்று நேற்று முன் தினம் வீசிய கஜா புயலிலும் நாகை மற்றும் வேதாரண்யம் பகுதிகள் பெரும் அழிவை சந்தித்தன. மேலும், நாகை ரயில் நிலையத்தில் நடைமேடையில் உள்ள மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT