Published : 02 Oct 2018 07:16 PM
Last Updated : 02 Oct 2018 07:16 PM
மயிலாப்பூரில் மாநகரப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய ஷேர் ஆட்டோ ஓட்டுநர் பாஸ்கரை போலீஸார் கைது செய்தனர்.
தாம்பரத்தைச் சேர்ந்தவர் சதீஷ் பாலமுருகன் (39). இவர் சென்னை மாநகரப் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். சதீஷ் பாலமுருகன் நேற்று காலை சுமார் 07.30 மணியளவில் வண்டலூரிலிருந்து பிராட்வே செல்லும் மாநகர பேருந்து தடம் எண் 21 G என்ற பேருந்தை ஓட்டிக்கொண்டு, மயிலாப்பூர் ஆர்.கே. மடம் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது மயிலாப்பூர் குளம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கியபோது, பேருந்துக்கு முன்னால் ஒரு ஷேர் ஆட்டோ வேகமாக வந்து நின்று பேருந்தை எடுக்க வழியில்லாமல் இடையூறாக நின்றது.
உடனே, பேருந்து ஒட்டுநர் சதீஷ் பாலமுருகன் ஷேர் ஆட்டோ ஓட்டுநரைப் பார்த்து ஆட்டோவை எடுக்கும்படி கூறினார். ஆனால், ஷேர் ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவை எடுக்க முடியாது எனக் கூறியதுடன் பேருந்து ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரது சட்டையைப் பிடித்து இழுத்து தனது கைகளால் தாக்கினார்.
இதனால் பேருந்து ஓட்டுநர் சதீஷ் பாலமுருகன் நிலைகுலைந்து போனார். உடனே, மேற்படி பேருந்தின் நடத்துநர் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து சதீஷ் பாலமுருகனைத் தாக்கிய ஷேர் ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், ஷேர் ஆட்டோ ஓட்டுநர் பாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்து செய்து விசாரணை செய்யப்பட்டது.
விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட பாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT