Published : 22 Oct 2018 08:09 AM
Last Updated : 22 Oct 2018 08:09 AM

தென்மேற்கு பருவமழை விலகியது: வடகிழக்கு பருவமழை 26-ம் தேதி தொடக்கம்

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை நேற்று விலகியது. வடகிழக்கு பருவமழை வரும் 26-ம் தேதி தொடங்கவாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் மாத தொடக்கத்திலேயே வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவிவந்தது. இதற்கிடையில், அரபிக்கடலில் உருவான ‘லூபன்’ புயல், வங்கக்கடலில் உருவான ‘தித்லி’ புயல் ஆகியவை காரணமாக, காற்று வீசும் திசைகள் மாறி, வடகிழக்கு பருவமழை தொடங்குவது தள்ளிப்போனது.

தென்மேற்கு பருவமழை விலகியதும், வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பருவமழை தொடங்குவது மேலும் தாமதம் ஆகியுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

நாடு முழுவதுமான நிலப்பரப்பு மற்றும் வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை 21-ம் தேதியுடன் (நேற்று) முற்றிலுமாக விலகிவிட்டது. தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகள், கடலோர ஆந்திரா, தெற்கு கர்நாடகாவின் உள்பகுதி, கேரளா ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வரும் 26-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது.

வங்கக்கடலில் தமிழகம் மற்றும் இலங்கை கடலோரப் பகுதியில் காற்று சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யவாய்ப்பு உள்ளது.

ஞாயிறு காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகரில் 12 செ.மீ., பேரை யூர், நாங்குநேரியில் 9 செ.மீ., அரண்மனைபுதூர், பெரிய குளத்தில் 7 செ.மீ., மணிமுத்தாறு, அம்பாசமுத்திரம், ராமேசுவரம், மயிலாடி, நாகர்கோவில், வில்லிபுத்தூரில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x