Published : 20 Oct 2018 08:03 PM
Last Updated : 20 Oct 2018 08:03 PM

ஐயப்பன் கோவில் விவகாரம்; கமல் ரஜினி , சிவக்குமார்: நழுவல்,மழுப்பல்,ஆவேசம்

ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் ரஜினி மழுப்பலாகவும், சிவகுமார் ஆவேசமாகவும், கமல் நழுவலாகவும் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளனர்.

ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கேரளாவில் பெரும் கலவரம் நடந்து வருகிறது. கோவிலுக்கு பெண்கள் வரக்கூடாது என்று இந்து அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் சில, பக்தர்கள் அமைப்புகள் என போராட்டம் நடந்து வருகிறது.

இதனால் கேரளாவில் சட்டம் ஒழுங்குபாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பதும், மற்ற கட்சிகள் ஆதரித்தும் மழுப்பியும் கருத்து தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இன்று நடிகர்கள் சிவக்குமார், ரஜினிகாந்த், கமல் ஹாசன் மூவரும் இந்த விவகாரத்தில் விதவிதமான கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஜினி அளித்த பேட்டி

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

பெண்களுக்கு அனைத்து இடத்திலும் சம உரிமை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் கோவில் என்று வரும்போது ஒவ்வொன்றுக்கும் ஒரு சடங்கு இருக்கும், காலகாலமாக வரும் ஐதீகம் இருக்கும் அதில் யாரும் தலையிடக்கூடாது என்பது எனது கருத்து. என்று ரஜினி பதிலளித்தார்.அப்படியானால் உச்சநீதிமன்ற தீர்ப்பு உதாசீனப்படுத்தப்படுகிறதா?

அப்படிச் சொல்லவில்லை. கொஞ்சம் இந்த மதச்சம்பந்தப்பட்ட சடங்குகளை பார்த்து செய்ய வேண்டும். இது பெண்களுக்கு சாதகமான விஷயம் அதை தவறாக பயன்படுத்தக்கூடாது.

என்று ரஜினி தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் கமல் அளித்த பேட்டி:

இந்த விஷயத்தில் தெளிவாக கருத்து தெரிவிக்கும் கமல்ஹாசன் மழுப்பலாக பதிலளித்தார். இந்த விவகாரத்தில் நான் பதில் சொல்வது சரியாக இருக்காது, இதுவரை நான் ஐயப்பன் கோவிலுக்கு சென்றதில்லை என்றும் எனவே அந்த விவகாரம் குறித்து தன்னிடம் கருத்து கேட்பது சரியாக இருக்காது என்றும் கூறினார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்கவில்லை, கேரளாவில் மக்கள் மதிக்கவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

நடிகர் சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது சபரிமலையில் பெண்கள் செல்லும் காலம் வரும் என்று தெரிவித்தார். மகரவிளக்கு காலம் கடுமையான கஷ்டமாக இருக்கும். அன்று லட்சக்கணக்கான ஆண்கள் கூடுவார்கள் மோதிக்கிட்டு, இடிபட்டு கஷ்டப்படுவார்கள், அந்த நேரத்தில் பெண்கள் போகக்கூடாது. பெண்களை அரசு அனுமதிக்கக்கூடாது, நீதிபதியும் அனுமதிக்கக்கூடாது. அந்த பத்து நாட்கள் தவிர 355 நாட்களும் பெண்களை தயவு செய்து அனுமதியுங்கள்.

நீங்கள் அனுமதிக்காவிட்டாலும் இன்னும் ஐந்து பத்து ஆண்டுகளில் பெண்கள் செல்வதை தடுக்க முடியாது என்று தெரிவித்தார். பெண்கள் அதிக அளவில் எதிர்க்கிறார்களே என்று கேட்டதற்கு அது உங்கள் தாயார், தந்தையார் போன்றோர். உன் தங்கச்சி அதை ஆதரிக்கும். வருங்காலத்தில் உங்கள் குழந்தைகள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்று ஆவேசமாக கூறினார்.

ஒரே விவகாரத்தில் இரண்டு முக்கிய நடிகர்கள் நழுவலாகவும் சிவக்குமார் அதிரடியாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x