Last Updated : 10 Oct, 2018 10:56 AM

 

Published : 10 Oct 2018 10:56 AM
Last Updated : 10 Oct 2018 10:56 AM

விழுப்புரம் அருகே பிறந்தநாளின் போது காதலியை சுட்டுக் கொன்று காவலர் தற்கொலை

விழுப்புரம் அருகே காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஈரோடு மாவட்டம், ஆட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திவேல். இவர் 2013-ம் ஆண்டு பட்டாலியன் போலீஸாக தேர்வு செய்யப்பட்டு, விவிஐபி பாதுகாப்புப் பிரிவில் சென்னையில் காவலராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும், விழுப்புரம் அருகே அன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் மகளான சரஸ்வதி என்பவருக்கும் ஃபேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு பின் காதலித்ததாகக் கூறப்படுகிறது. சரஸ்வதி, சென்னை கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மாணவியாவார்.

இதற்கிடையே 2 பேருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்தனர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் சரஸ்வதியின் பிறந்தநாளை முன்னிட்டு கார்த்திவேல் செவ்வாய்க்கிழமை இரவு சென்னையிலிருந்து பைக்கில் புறப்பட்டு அன்னியூர் வந்துள்ளார். நள்ளிரவு சரஸ்வதி மற்றும் அவரது குடும்பத்தார் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

வீட்டிற்குள் உள்ள அறை ஒன்றில் சரஸ்வதியும், கார்த்திவேலுவும் பேசிக்கொண்டிருக்கும்போது, சரஸ்வதியின் தந்தை சேகர் மற்றும் குடும்பத்தார் டிவி பார்த்துகொண்டு இருந்தனர். அப்போது திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த சேகர் மற்றும் அவரின் குடும்பத்தார் அறையை நோக்கி ஓடினர். அதற்குள் மீண்டும் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. அறைக்குச் சென்று பார்த்தபோது கார்த்திவேல் மற்றும் சரஸ்வதி இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் அனந்தபுரம் போலீஸார் மற்றும் எஸ்.பி ஜெயகுமார் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் சரஸ்வதியின் இடதுபக்க மார்பில் இரு தோட்டாக்கள் பாய்ந்துள்ளதும், கார்த்திவேல் நெற்றிப்பொட்டில் ஒரு தோட்டாவும் பாய்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இருவரின் உடல்களை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தும், கார்த்திவேல் வைத்திருந்த துப்பாக்கியையும் போலீஸார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நடந்தது என்ன?

சுட்டுக்கொல்லப்பட்ட சரஸ்வதி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பி.எஸ்சி நர்சிங் படிக்கும்போது ஃபேஸ்புக் மூலம் கார்த்திவேலுவுடன் நட்பானார். பின்னர் மூன்றாண்டுகளுக்கு முன் சென்னை கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துக் கல்லூரில் சரஸ்வதிக்கு இடம் கிடைத்தது. அதன் பின் சரஸ்வதி கார்த்திவேலுவிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சென்னையிலிருந்து கேக் வாங்கிக்கொண்டு சரஸ்வதிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல அன்னியூரில் உள்ள சரஸ்வதியின் வீட்டுக்கு வந்த கார்த்திவேல் சரஸ்வதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் தன்னிடமிருந்த துப்பாக்கியால் சரஸ்வதியின் இதயப்பகுதியில் இரண்டு முறை சுட்டிருக்கிறார். இதில் சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் இறந்து போகிறார். இதை உறுதிப்படுத்திக்கொண்ட கார்த்திவேல் தன் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x