Published : 04 Oct 2018 05:23 PM
Last Updated : 04 Oct 2018 05:23 PM
குட்கா முறைகேடு விவகாரத்தில் சிபிஐ நடத்திய விசாரணையில் மேலும் இரண்டு மத்திய அரசு அதிகாரிகள் வீட்டில் இன்று சிபிஐ அதிரடி ரெய்து நடத்துகிறது.
சிபிஐ குட்கா விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்தது. இதனையடுத்து சிபிஐ அதிகாரிகள் கடந்த செப். 5 அன்று சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி, பெங்களூரு, மும்பை, குண்டூர் உள்ளிட்ட 35 இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தினர். குட்கா தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநர்கள், மற்றும் பிற அரசு ஊழியர்கள், விற்பனை வரித்துறை அதிகாரிகள், சுங்க மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள், உணவுப்பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது
ரெய்டில் தமிழ்நாடு சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, தமிழ்நாடு டிஜிபி டிகே. ராஜேந்திரன், முன்னாள் டிஜிபி ஜார்ஜ், உதவி ஆணையர் மன்னர் மன்னன், வில்லிபுரம் டிஎஸ்பி ஷங்கர், ஆய்வாளர் சம்பத் குமார், உணவு மற்றும் மருந்துத்துறையைச் சேர்ந்த அதிகாரிகளான செந்தில் முருகன், டாக்டர் லஷ்மி நாராயணன், இ.சிவகுமார், மத்திய கலால் வரித்துறை அதிகாரிகளான ஆர்.குல்சார் பேகம் ஆர்.கே.பாண்டியன், ஷேஷாத்ரி, ஏ.வி.மாதவராவ், உமா சங்கர் குப்தா, ஸ்ரீநிவாஸ் ராவ் ஆகியோர் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து புரோக்கர்கள் இருவர், ஏ.வி.மாதவராவ், உமா சங்கர் குப்தா, ஸ்ரீநிவாஸ் ராவ், உணவுப்பாதுகாப்பு அதிகாரி செந்தில் முருகன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதவிர சுகாதாரத்துறை அதிகாரி சிவகுமாரும் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அனைவரும் சிறையில் உள்ள நிலையில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குட்கா விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள ஜிஎஸ்டி கூடுதல் ஆணையர் செந்தில்வளவன் மற்றும் மத்திய கலால் வரித்துறை நுண்ணறிவு பிரிவு ஓய்வுப்பெற்ற அதிகாரி ஸ்ரீதர் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறது. இதுவரை கைது செய்யப்பட்டவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சிபிஐ பல தகவல்களை திரட்டியுள்ளது. இதையடுத்து சமபந்தப்பட்டவர்கள் வீடுகளில் ரெய்டு நடத்துகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT