Published : 27 Oct 2018 08:50 AM
Last Updated : 27 Oct 2018 08:50 AM

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்குகிறார் விக்னேஸ்வரன்

இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி, தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியை தொடங்க உள்ளதாக இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 5 மாவட்டங்கள் வட மாகாணம் ஆகும். வடமாகாண சபை என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கான சட்டவாக்க அவை ஆகும்.வட மாகாண சபைக்கு கடந்த21.09.2013 அன்று இலங்கைவரலாற்றிலேயே முதல்முறையாகதேர்தல் நடைபெற்று 38 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வடக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வடக்கு மாகாண சபையின்ஆயுள் காலம் புதன்கிழமை (நேற்று) நள்ளிரவுடன் முடிவுக்குவந்த நிலையில், முதலமைச்சராக தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தை நிறைவுசெய்த சி.வி.விக்னேஸ்வரன் புதன்கிழமை காலை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி, தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.முன்னதாக, யாழ்ப்பாணத்தில் கடந்த திங்கட்கிழமை தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சி.வி.விக்னேஸ்வரன் கூறியதாவது: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொது வேட்பாளராகவே கடந்த தேர்தலில் போட்டியிட்டேன். ஆனால், என்னை ஒரு பொம்மையாக வைத்து அரசியல் நடத்த அதன் தலைவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அதற்கு நான் இடம் அளிக்கவில்லை. இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் எனக்கும் இடைவெளி அதிகரித்தது.இந்த இடைவெளியால் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைக் காண்பதில் கோட்பாடுரீதியாகவும், அணுகுமுறைரீதியாகவும் தொய்வு ஏற்பட்டது. ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில், மீண்டும் போட்டியிடுவதை என்னால் நினைத்தும் பார்க்க முடியவில்லை.

இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் 16 உறுப்பினர்கள் இருந்தும் தமிழ் மக்களின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து அவர்கள் அக்கறை செலுத்தவில்லை. தமிழர்களின் எண்ணங்களை பிரதிபலிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவறி விட்டது. எனவே தமிழ் தேசியக் கூட்டணியில் இருந்து விலகுகிறேன்.

தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சி உருவாக்கப்படும். இந்த கட்சி இதர தமிழர் கட்சிகளையும் ஒன்றிணைத்து, தமிழ் தேசியத்தின் அடிப்படை கொள்கைகளுக்காக பாடுபடும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x