Published : 20 Oct 2018 04:24 PM
Last Updated : 20 Oct 2018 04:24 PM

கல்லூரி மாணவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை: மதுரையில் 20 ஆண்டுகளாக நீடிக்கும் பழிக்குப் பழி கொலை சம்பவங்கள்

மதுரையில் கல்லூரி மாணவரை அரிவாள், கத்தியுடன் வந்த 8 பேர் கொண்ட ரவுடிக் கும்பல் வெட்டிக் கொன்றனர். பழிக்குப் பழியாக இந்தக் கொலை சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மதுரை அனுப்பானடி தெய்வக்கன்னி தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகன் பிரவீன் குமார் (20). இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் பிஏ 2-ம் ஆண்டு படித்து வந்தார். இப்பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக மோதல் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. பலர் இதற்கு முன் வெட்டிக் கொலையும் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் தெய்வக்கன்னி தெருவில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழா நடந்தது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில், ஒரு தரப்பினர் பிரவீன் குமார் மீது முன் விரோதத்தில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு நண்பர் காளியுடன் பிரவீன் குமார், அங்குள்ள காளியம்மன் கோயில் அருகே பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அரிவாள், கத்தியுடன் வந்த 8 பேர் கொண்ட கும்பல், பிரவீன் குமாரை ஓட ஓட விரட்டி வெட்டினர். தடுத்த காளியையும் வெட்ட முயன்றுள்ளனர். அவர் தப்பியோடிவிட்டார். படுகாயம் அடைந்த பிரவீன் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தெப்பக்குளம் போலீஸார், சைக்கோ கண்ணன், சோப்பு செல்வக்குமார், அய்யர் பிரவீன், விக்கி, மணி, டோரி ராஜவேலு, பாலகணேஷ் உள்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பிரவீன் குமாரை வெட்டிக் கொன்ற அந்த 8 பேர் கொண்ட கும்பல், அருகில் உள்ள அவரது நண்பர் அரச மகாராஜன் வீட்டிற்குள் புகுந்து அவரையும் வெட்டியுள்ளனர். அப்பகுதி பொதுமக்கள் திரண்டு விரட்டியதால் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். படுகாயம் அடைந்த அரச மகாராஜன் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இரு தரப்பினருக்கும் இடையே காலம் காலமாக இருந்து வரும் மோதலில் கல்லூரி மாணவர் பழிக்குப் பழியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

மோதல், முன் பகை இருக்கும் பகுதியில் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி போலீஸார் சுமுகமாகத் தீர்வு காணாமல் அலட்சியமாக இருந்ததாலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x