Last Updated : 08 Oct, 2018 06:35 PM

 

Published : 08 Oct 2018 06:35 PM
Last Updated : 08 Oct 2018 06:35 PM

86 கி.மீ. வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டது; ரூ.7 கோடி அரசு நிதி சேமிப்பு: சேவை புரிந்தோருக்கு பரிசு தர கிரண்பேடி முடிவு

புதுச்சேரியில் 86 கி.மீ. வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு ரூ.7 கோடி அரசு நிதி சேமிக்கப்பட்டுள்ளது. சேவை புரிந்தோருக்கு வரும் தீபாவளியன்று ராஜ்நிவாஸில் பரிசுப்பொருட்களை வழங்க உள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''புதுச்சேரி நீர்நிலைகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். பலர் தங்களின் பங்களிப்பை இப்பணியில் செய்துள்ளனர். புதுச்சேரியில் இதுவரை 86 கி.மீ. நீளமுள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளது. இதனால் அரசு நிதி ரூ. 7 கோடி வரை சேமிக்கப்பட்டுள்ளது. இதற்கான தன்னலமற்ற சேவை செய்தோரை பாராட்ட வேண்டும்.

இதற்காக தீபாவளியன்று நீர் நிலைகளைப் பாதுகாக்க சிறப்பாக செயல்புரிந்தோருக்கு பாராட்டும், பரிசும் தரப்படும். இதற்கான பட்டியல் ரகசியமாகவும், நேர்மையாகவும் தயாரித்து வருகிறோம். புதுச்சேரி ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸுக்கு அளிக்கப்பட்ட பரிசுகளை புதுச்சேரி மக்களுக்கே தர உள்ளோம். தீபாவளி நாளில் நடக்கும் விழாவில் இப்பரிசுகள் சேவை புரிந்தோகுக்கு தரப்படும்'' என்று கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x