Published : 23 Oct 2018 09:06 AM
Last Updated : 23 Oct 2018 09:06 AM
3 சிலைகள் மாயமான விவகாரம் தொடர்பாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முன்னதாக திருப்பணிகள் செய்யப்பட்டன. அப்போது, புன்னைவன நாதர் சிலை, ராகு மற்றும் கேது சிலைகள் சேதமடைந்திருப்பதாகக் கூறி அந்தச் சிலைகள் மாற்றப்பட்டு, புதிய சிலைகள் வைக்கப்பட்டன.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இந்தப் பணிகள் செய்யப்பட்டன. ஆனால், கோவில் சிலைகளை மாற்றுவதற்கு அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இரவோடு இரவாக மூன்று சிலைகளும் மாற்றப்பட்டன. இப்படி மாற்றப்படும் சிலைகள் ஆகமவிதிப்படி பூஜை செய்து, மண்ணில் புதைத்து வைக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் 3 சிலைகளையும் அதிகாரிகள் துணையு டன் வெளிநாட்டுக்கு கடத்தி, பல கோடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வந்த புகாரின் பேரில் அறநிலையத் துறை ஆணையர் ஜெயா, கோவில் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் கோவில் சிலைகள் காணாமல் போய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிலைகள் மாயமானது குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மயிலாப்பூர் கபாலீஸ்வர் கோயில் சிலைகள் மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகளிட,ம் அவரது வீட்டில் வைத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த 13-ம் தேதி விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி குமார் தலைமையிலான போலீஸார் நேற்று காலையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சென்று சிலைகள் தொடர்பான சில ஆவணங்களை ஆய்வு செய்தனர். மேலும், அங்கிருந்த அர்ச்சகர்களிடம் விசாரணையும் நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT