Published : 08 Oct 2018 08:28 PM
Last Updated : 08 Oct 2018 08:28 PM

கொடைக்கானலில் கணவன் கொலை: மாயமான மனைவி, ஆண் நண்பர் கைது

கொடைக்கானலில் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரையே கொலை செய்து மாயமான இளம்பெண்ணும், ஆண் நண்பரும் சிக்கினர்.

பெரியகுளம் அருகே கொடைக்கானல் சாலையில் டம்டம் பாறை அருகே கடந்த 18-ம் தேதி இளைஞர் ஒருவரின் பிணம் கிடந்தது. கழுத்தறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த ஆண் பிணத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்ததால் சுற்றுலா வந்த பயணியை வழிப்பறி செய்தவர்கள் கொலை செய்திருக்கலாம்? அல்லது அவருடன் வந்தவர்கள் கொலை செய்துவிட்டு ஓடியிருக்கலாம்? அல்லது வேறெங்காவது கொலை செய்துவிட்டு பிணத்தை இங்கு கொண்டுவந்து போட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

போலீஸார் விசாரணையில் அவரது உடையிலிருந்த அடையாளம், மற்ற விபரங்களைச் சோதித்ததில் அவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் என்பது தெரியவந்தது. அம்மாநில போலீஸாரைத் தொடர்பு கொண்டபோது போலீஸாருக்குத் திடுக்கிடும் தகவல் வெளியானது.

மங்களூரைச் சேர்ந்த முகமது ஷமீர் கடந்த 14-ம் தேதி மனைவி பர்தோஷ், 3 மாதக் குழந்தையுடன் கொடைக்கானலுக்குச் சுற்றுலா வந்ததாகவும் பின்னர் 17-ம் தேதி ஷமீர் காணாமல் போனதாகவும் புகார் வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

மனைவியுடன் சுற்றுலா வந்தவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். அவரது மனைவி என்ன ஆனார் என இறங்கிய பெரியகுளம், தேவதானப்பட்டி போலீஸார் உடனடியாக விசாரணையில் இறங்கினர்.

ஷமீரின் மனைவி பர்தோஷைத் தொடர்பு கொள்ள முயன்றபோது அவர்களுக்குத் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. பர்தோஷ் தனக்குப் பழக்கமான ஆண் நண்பரான கால் டாக்ஸி ஓட்டுநருடன் சென்றுவிட்டதாகவும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸார் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கால் டாக்ஸி ஓட்டுநருடன் செல்லும்போது 60 சவரன் நகையையும் எடுத்துச் சென்றுள்ளதாக உறவினர்கள் புகார் அளித்தனர். தப்பி ஓடிய பர்தோஷ் 3 மாத கைக்குழந்தையை விட்டுச் சென்றுவிட்டார். குழந்தை உறவினர்களின் பராமரிப்பில் உள்ளது.

பர்தோஷ் வெளியே செல்ல கால் டாக்ஸியைப் பயன்படுத்தியுள்ளார். அப்போது அவருக்கும் ஆசிப் என்கிற கார் ஓட்டுநருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. நட்பு நாளடைவில் இறுக்கமாகி ஒருகட்டத்தில் கூடா நட்பாக மாறிப் போனது.

இந்நிலையில் ஒருவரை ஒருவர் பிரிய மனமில்லாத நிலையில் தங்கள் புதிய உறவுக்கு கணவரும், கைக்குழந்தையும் தடையாக இருப்பதாக இருவரும் கருதியுள்ளனர். இதையடுத்து கணவரைக் கொலை செய்துவிட்டு அதை விபத்தாகக் காண்பித்து தனது ஆண் நண்பருடன் சென்றுவிட பர்தோஷ் முடிவு செய்துள்ளார்.

இதற்காக ஆசீப்புடன் சேர்ந்து திட்டமிட்டு கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்வதுபோல் கடந்த 14-ம் தேதி கணவரை அழைத்துக்கொண்டு கொடைக்கானல் வந்துள்ளார். அங்கு அவரை கழுத்தறுத்து கொன்றுவிட்டு பெங்களூர் தப்பி வந்த அவர்கள் உறவினர்களிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு 60 சவரன் நகையுடன் தப்பி ஓடினர்.

இந்நிலையில் கணவரைக் கொன்ற மனைவி பர்தோஷ், கால் டாக்ஸி டிரைவர் அசீப்பை தேவதானப்பட்டி போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். தொடர்ச்சியான தேடுதலில் கொலை நடந்து 20 நாட்களுக்குப் பின்னர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையம் அருகே ஆசிப், பர்தோஷ் இருவரையும் போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.

போலீஸாரின் விசாரணையில் கணவரைச் சுற்றுலாவுக்கு அழைத்து வந்து இளநீரில் தூக்கமருந்தைக் கலந்துகொடுத்து அவர் மயங்கிய நிலையில் இருந்தபோது டம்டம் பாறை அருகே தனியான இடத்தில் கழுத்தை அறுத்து வீசி விட்டுச் சென்றதாக இருவரும் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர். 3 மாத குழந்தை பற்றி கவலைப்படாமல், கணவனைக் கழுத்தறுத்துக் கொன்ற பர்தோஷின் செயல் அவரது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x