Published : 24 Oct 2018 09:48 AM
Last Updated : 24 Oct 2018 09:48 AM

செல்போன் பறித்து தப்பியவர் விபத்தில் சிக்கினார்

கல்லூரி மாணவனின் செல்போனை பறித்து தப்பியபோது விபத்து மாட்டிக் கொண்ட ஒருவர் சிக்கினார். தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை செம்மஞ்சேரியைச் சேர்ந்தவர் மகாதேவன் (18). அதே பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 21-ம் தேதி இரவு 9 மணியளவில் அதே பகுதியில் போனில் பேசியவாறு நடந்து சென்று கொண்டு இருந்தார். இதை நோட்டம் விட்ட 3 பேர் ஒரே பைக்கில் சென்று மகாதேவன் செல்போனை பறித்து தப்பினர். சிறிது தூரம் சென்று சாலையிலேயே திரும்பும் போது நிலை தடுமாறி பைக் சாலையிலேயே சரிந்தது. அப்போது, தடுப்பு சுவரில் மோதி கொள்ளையர்களில் ஒருவர் காயம் அடைந்து மயங்கினார். மற்ற 2 பேரும் அங்கிருந்து தப்பினர். தகவல் அறிந்து விரைந்து சென்ற செம்மஞ்சேரி போலீஸார் காயம் அடைந்த இளைஞரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

போலீஸ் முதல் கட்ட விசாரணையில் பிடிபட்டவர் ஈஞ்சம்பாக்கம் பெரியார் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் (19) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்துள்ள போலீஸார் தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x