Published : 02 Oct 2018 06:36 PM
Last Updated : 02 Oct 2018 06:36 PM

தடை செய்யப்பட்ட மாவா பாக்கெட்டுகளை விற்பனை செய்த நபர் போலீஸிடம் சிக்கினார்

பெரியமேடு பகுதியில் டீக்கடையில் சட்டவிரோதமாக மாவா பாக்கெட்டுகளை விற்பனை செய்த நபரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 500 கிராம் மாவா மற்றும் 420 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை திருவொற்றியூரில் உள்ள விம்கோ நகரைச் சேர்ந்தவர் முனியாண்டி (44). இவர் சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் அருகில் உள்ள அல்லிக்குளம் பகுதியின் டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்படி, போலீஸார் அப்பகுதி டீக்கடையை ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். அப்போது அதிக அளவில் இளைஞர்கள் மாவா பாக்கெட்டுகளை வாங்கிச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து பெரியமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று அல்லிக்குளம் பகுதி டீக்கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட மாவா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாவா பாக்கெட்டுகளை விற்பனை செய்துவந்த முனியாண்டியை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட முனியாண்டியிடமிருந்து 500 கிராம் எடை கொண்ட 65 மாவா பாக்கெட்டுகள் மற்றும் பணம் ரூ.420 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. முனியாண்டி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x