Published : 29 Aug 2018 03:52 PM
Last Updated : 29 Aug 2018 03:52 PM

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவிடம் ஸ்டாலின் ஆசி பெற்றார்

திமுக தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகிய இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், கருணாநிதியின் நண்பரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யாவை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றனர்.

இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்டு பின்னர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து அதன் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநிலச் செயலாளர், பொலிட் பீரோ உறுப்பினர், மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினர் என பொறுப்புகள் வகித்தவர் என்.சங்கரய்யா.

மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளரும், தீக்கதிர் நாளேட்டின் ஆசிரியரகவும் இருந்த சங்கரய்யா மறைந்த திமுக தலைவர் மறைந்த கருணாநிதியின் நண்பராக விளங்கியவர். தற்போது 96 வயதாகும் சங்கரய்யா தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி ஓய்வில் இருக்கிறார்.

சுதந்திரத்துக்கு முன்னும், அதன் பின்னரும் எட்டு ஆண்டுகள் சிறைவாசம், மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை நடத்தியவர் சங்கரய்யா. கருணாநிதியைப்போன்றே இலக்கியவாதி, தீக்கதிர், ஜனசக்தியின் ஆசிரியராக இருந்து வழி நடத்தியவர். கருணாநிதி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட அதே 1957-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மதுரை கிழக்குத் தொகுதி தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

1962-லும் தோல்வி. 1967-ல் மதுரை மேற்குத் தொகுதியில் முதன்முறையாக வெற்றிபெற்றார். அடுத்தடுத்து நடந்த 1977, 1980 தேர்தல்களிலும் (மதுரை கிழக்கு) தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். 1993-ல் திமுக பிளவுபட்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதிமுகவை ஆதரித்த போதும் கருணாநிதி, சங்கரய்யா நட்பு நீடித்தது. 1996-ல் எதிரணியில் நின்றபோதும் ஆட்சிக்கு வந்து முதல்வரான கருணாநிதிக்கும் இவருக்குமான நட்பு நீடித்தது.

கருணாநிதியை விட ஒரு வயது மூத்தவர் சங்கரய்யா. ஓய்வு காரணமாக தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கினாலும் இன்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

கருணாநிதியின் நெருங்கிய நண்பரான சங்கரய்யாவுக்கு அவரது மறைவு பெரும் துயரத்தை அளித்தது. வயோதிகம் காரணமாக நேரில் அஞ்சலி செலுத்த முடியாவிட்டாலும், தனது வீட்டில் இறுதி நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்த சங்கரய்யா கம்யூனிஸ்டுகள் பாணியில் கையை உயர்த்தி ‘போய் வா தோழா’ என்பது போல் அஞ்சலி செலுத்தும் காட்சியும், கண்ணில் வழியும் நீரைத் துடைக்கும் காட்சியும் வலைதளங்களில் வைரலானது.

தமது தந்தையின் நெருங்கிய நண்பரும், தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், சுதந்திரப்போராட்ட வீரருமான சங்கரய்யாவிடம் தான் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவரிடம் ஆசிபெற விரும்பினார். குரோம்பேட்டையில் வசித்துவரும் சங்கரய்யா வீட்டுக்கு ஸ்டாலினும், துரைமுருகனும் சென்றனர். அவர்களை சங்கரய்யா வரவேற்றார்.

பின்னர் இருவரும் அவரிடம் ஆசி பெற்றனர். அவர்களை அமரவைத்து தந்தையின் மரணம், அரசியல் நிகழ்வு குறித்து சங்கரய்யா கேட்டறிந்தார். பின்னர் அவரிடமிருந்து ஸ்டாலினும் துரைமுருகனும் விடைபெற்று  இல்லம் திரும்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x