Published : 16 Aug 2018 02:00 PM
Last Updated : 16 Aug 2018 02:00 PM

போர்க்கால வேகத்தில் முனைப்புடன் செயல்பட்டு கேரள மக்களுக்கு உதவுக: முத்தரசன் வேண்டுகோள்

 போர்க்கால வேகத்தில் முனைப்புடன் செயல்பட்டு கேரள மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முத்தரசன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத பெருமழை பெய்து, கேரள மாநிலம் முழுவதும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கேரளத்தின் தலைநகர் திருவனந்தபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களும் மழை வெள்ளப்பெருக்கால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை விலை மதிக்க முடியாத 60-க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாகியுள்ளது பெரும் துயரமாகும்.

நிலச்சரிவாலும், பெருமழை வெள்ளத்தாலும் தங்களின் வீடுகளை, இழந்து மக்கள் நிர்க்கதியாய் உள்ளனர். விளைவித்த பயிர்கள், பாக்கு, தென்னை, வாழை, மா, பலா என பலன் தரும் மரங்களை பெருமளவில் இழந்து விட்டனர். பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க, கேரள மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றி வருகின்றது. பல ஆயிரம் கோடி நிதி தேவைப்படுகின்றது. பல மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், தனி நபர்களும் தங்களால் இயன்ற நிதியை வழங்கி வருவது வரவேற்கத்தக்கது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தங்களால் இயன்ற அளவு நிதி வழங்குவதுடன், பொதுமக்களிடத்தில், வணிகர்களிடத்தில் நிதி வசூல் செய்து உடனடியாக அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் பொருட்களும், நிதியுமாக ரூ.11 லட்சத்தை முதல் கட்டமாக அனுப்பியுள்ளது பாராட்டத்தக்கது. மற்ற மாவட்டங்களும், போர்க்கால வேகத்தில் முனைப்புடன் செயல்பட்டு கேரள மக்களுக்கு உதவ முன்வர வேண்டும்” என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x