Published : 23 Aug 2018 08:59 AM
Last Updated : 23 Aug 2018 08:59 AM
காஞ்சிபுரத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் பழங்கால கல்வெட்டு வாசிப்பு பயிற்சி ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்குகிறது. 3 நாட்கள் நடைபெறவுள்ள இப் பயிற்சியில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம்.
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அரசு அருங்காட்சியகம் உள்ளது. இங்கு பல்வேறு பழங்காலப் பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில் பழங்கால எழுத்துகள் எவ்வாறு உருமாறின என்பது குறித்தும் கல்வெட்டு எழுத்துகள் குறித்தும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர் காஞ்சிபுரம் என்பதால் இங்குப் பழங்கால கோயில்களும், கல்வெட்டுகளும் அதிகம் உள்ளன. கல்வெட்டு எழுத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவற்றைப் படித்துத் தெரிந்து கொள்வதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க பள்ளி மாணவர்களுக்கு அனுமதி இல்லை.
இதுகுறித்து காஞ்சிபுரம் அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் உமாசங்கரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
இந்தக் கல்வெட்டு வாசிப்புப் பயிற்சியில் கல்லூரி மாணவர்கள் 25 பேர், பொதுமக்கள் 25 பேர் என மொத்தம் 50 பேர் மட்டுமே பங்கேற்க முடியும். காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த தமிழ் மற்றும் வரலாற்றுத் துறை மாணவிகள் 25 பேர் ஏற்கெனவே பதிவு செய்து விட்டனர். பொதுமக்களில் 25 பேருக்கு மட்டுமே பதிவு நடைபெறுகிறது.
இந்தப் பயிற்சி முற்றிலும் இலவசம். கிருஷ்ணகிரி அருங்காட்சியகக் காப்பாட்சியர் செ.கோவிந்தராஜ் பயிற்சி அளிக்க உள்ளார். முதல் 2 நாட்கள் வகுப்புகளில் பயிற்சி நடைபெறும்.
3-வது நாள் கல்வெட்டு எழுத்துகள் உள்ள இடங்களுக்குச் சென்று நேரடியாகக் கற்கும் வகையில்களப் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். வகுப்புகள் காலை 10 முதல் 1 மணி வரை நடைபெறும். இதில் பங்கேற்க விரும்புபவர்கள் அருங்காட்சியகத்துக்கு நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு உமாசங்கர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT