Published : 27 Aug 2018 09:17 AM
Last Updated : 27 Aug 2018 09:17 AM

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த தனியார் காப்பக வார்டன் கைது

ஆவடி அருகே திருமுல்லைவாயலில் சிறுவர்- சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கில் தலைமறை வாக இருந்த தனியார் காப்பக வார்டன் நேற்று கைது செய்யப்பட்டார்.

ஆவடி அருகே திருமுல்லைவாயல் சரஸ்வதி நகரில் 15 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வரும் தனியார் காப்பகம் ஒன்றில் 26 சிறுமிகள், 22 சிறுவர்கள் என 48 பேர் தங்கி பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த காப்பகத்தில் உள்ள சிறுவர்-சிறுமிகளுக்கு, காப்பக ஊழியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக ஏற்கெனவே புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 23-ம் தேதி திருமுல்லைவாயலில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் அம்பத்தூர் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் சட்டவிழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில், அம்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ன் நீதிபதி அனிதா ஆனந்த், விரைவு நீதிமன்ற நீதிபதி சவுந்தர்யா, முன்சீப் நீதிமன்ற நீதிபதி அருண் சபாபதி ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது, நீதிபதிகள், காப்ப கத்தில் தங்கி, அரசுப் பள்ளியில் படிக்கும் சிறுவர் - சிறுமிகளிடம் நடத்திய விசாரணை யில், சிறுவர் - சிறுமிகளுக்கு காப்பக ஊழியர்கள் பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது.

தொடர்ந்து, நீதிபதிகள் உத்தரவின்படி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், அரசுப் பள்ளியில் படிக் கும் காப்பக சிறுவர்-சிறுமிகள் 4 பேருக்கு கடந்த 5 ஆண்டுகளாக காப்பக காப்பாளர், மேலாளர், உதவியாளர் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் மற்றும் போலீஸாரால், சம்பந்தப்பட்ட காப்பகத்தில் இருந்த சிறுவர்-சிறுமிகள் அங்கிருந்து மீட்கப்பட்டு, ஆவடி அருகே பொத்தூர் பகுதியில் உள்ள 2 தனியார் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், காப்பக மேலாளர் பாஸ்கர், உதவியாளர் முத்து, காப்பக உரிமையாளர்களான ஜேக்கப், விமலா ஜேக்கப் ஆகிய 4 பேரை கடந்த 24-ம் தேதி கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாக இருந்த காப்பக காப்பாளரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை சென்னை அருகே தாம்பரத்தில் தலைமறைவாக இருந்த காப்பக காப்பாளர் பாபுசாமுவேல்(54) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x