Published : 21 Aug 2018 01:05 PM
Last Updated : 21 Aug 2018 01:05 PM
சைக்கிள் வாங்க சேமித்து வைத்திருந்த பணம் ரூ.8 ஆயிரத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு அளித்த சிறுமிக்கு ஹீரோ சைக்கிள் நிறுவனம் புதிய சைக்கிள் வழங்கியது.
விழுப்புரம் கே.கே.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சிவ சண்முகநாதன். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு 8 வயதில் மூன்றாம் வகுப்பு படிக்கும் அனுப்பிரியா என்ற மகள் உள்ளார். இவருக்கு சைக்கிள் ஓட்டவேண்டும் என்று கொள்ளை ஆசை. இதற்காக தந்தையிடம் கேட்டபோது அவர் மொத்தமாக சைக்கிள் வாங்கித் தரும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை அவ்வப்போது பணம் தருகிறேன் அதை சேமித்து வாங்கிக்கொள் என்று கூறிவிட்டார்.
பெற்றோரின் நிலையைக் கருதி சிறுமியும், அவர்கள் அவ்வப்போது தரும் பணத்தை உண்டியலில் சேமித்து வந்தார். இவ்வாறு நான்கு ஆண்டுகளாக எவ்வளவு சேர்ந்திருக்கிறது என்று எடுத்து எண்ணி வருவார். வரும் அக்டோபர் 16-ம் தேதி அனுப்ரியாவுக்கு பிறந்த நாள் வருகிறது. அன்று எப்படியும் புது சைக்கிள் வாங்கி ஜாலியாக ஓட்டவேண்டும் என்ற கனவில் சிறுமி இருந்தார்.
இந்நிலையில் கேரளாவில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மழை வெள்ளம், நிலச்சரிவு காரணமாக கேரள மக்கள், வீடிழந்து உடைமைகளை இழந்து வாடும் செய்தியை பார்த்த சிறுமி உண்டியல்களில் சைக்கிள் வாங்க தான் சேமித்து வைத்திருந்த சுமார் எட்டாயிரம் ரூபாய் பணத்தை கேரள நிவாரண நிதிக்கு அளித்தார்.
தனது ஆசையைத் தள்ளிவைத்து அந்தப் பணத்தை அளித்த பிஞ்சு மனதை அனைவரும் பாராட்டினர். அவரது செயலைப்பார்த்து நெகிழ்ந்துபோன பலரும் சிறுமிக்கு புது சைக்கிள் வாங்கித் தர முன் வந்தனர். இதனிடையே அனுப்ரியாவின் சேவை மனப்பான்மையைப் பாராட்டி, ஆண்டுதோறும் ஒரு புதிய சைக்கிள் பரிசளிக்கப்படும் என்று ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக மேலாளருமான பங்கஜ் முன்ஜல் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.
அதன்படி சிறுமியை கண்டறிந்து அவரது ஊரிலேயே உள்ள ஹீரோ சைக்கிள் ஷோரூமுக்கு வரவழைத்த பங்கஜ் முன்ஜல், சிறுமியின் விருப்பப்படிஅவர் தேர்வு செய்த சைக்கிளை அளித்தார். பின்னர் ஆண்டுதோறும் புதிய சைக்கிள் வழங்கும் உறுதிமொழி பத்திரத்தை சிறுமியிடம் அளித்தார். சிறுமியின் பெற்றோர் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT