Published : 14 Aug 2018 06:40 PM
Last Updated : 14 Aug 2018 06:40 PM

சென்னைக்கு 2 நாட்களுக்கு மழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து கர்நாடகம், கேரள மாநிலங்களில் பெய்து வருகிறது. கேரள மாநிலத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், மாநிலத்தில் உள்ள 22 அணைகளும் நிரம்பி, திறந்துவிடப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, 49-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

தென் மேற்கு பருவமழையின் தாக்கம் தமிழகத்தின் நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, வால்பாறை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் இருந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் ஒரு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை மழை பெய்துவருகிறது. இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது:

சென்னையில் மிகவும் அரிதாகப் பருவமழை பெய்து வருகிறது. வெப்பச்சலனக்காற்று சென்னைக்கு அருகே வீசுவதால், இந்த மழை ஏற்படுகிறது. வழக்கமாக தெற்கு ஆந்திரபிரதேசம், வடக்கு தமிழகத்தில் இந்த நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை. ஆனால், சென்னையில் காலையில் மேக மூட்டமாக உள்ளது, மாலையில் மழை பெய்கிறது.

வெப்பச்சலனக்காற்று காரணமாக சென்னையில் இன்றும், நாளையும் மாலை நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புண்டு. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும், புறநகர்ப் பகுதிகளிலும் சில மணிநேர இடைவெளிவிட்டு மாலை நேரங்களில் மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x