Published : 27 Aug 2014 11:46 AM
Last Updated : 27 Aug 2014 11:46 AM

விநாயகர் சதுர்த்தி: சிலைகள் தயாரிப்பு தீவிரம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, திருவள்ளூர் அருகே பல வடிவங்களில் விநாயகர் சிலை கள் தயாராகியுள்ளன.

இந்து மதத்தினர் கொண்டாடும் முக்கிய விழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி வரும் 29-ம் தேதி இந்தியா முழுவதும் கோலா கலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவினை முன்னிட்டு, வீடுகள் மற்றும் வீதிகளில் வைக்கப்படவுள்ள விநாயகர் சிலைகள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தயாராகி, விநாயகர் சதுர்த்திக்காக காத்திருக்கின்றன.

அந்த வகையில், திருவள்ளூர் அருகே உள்ள திருப்பாச்சூர் பகுதி யில் விநாயகர் சிலைகள் தயாராகி உள்ளன.

ராஜஸ்தானைச் சேர்ந்த தேஷா என்பவர் உட்பட 5-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் கை வண்ணத்தில் இந்த சிலைகள் உருவாகியுள்ளன. மயில், ஐந்து தலை நாகப்பாம்பு, யானை, சிம்மாசனம் உள்ளிட்டவைகளில் அமர்ந்தபடி காட்சியளிக்கும் விநாயகர் சிலைகள், சிவன்- பார்வதி ஆகியோரின் கீழ் அமர்ந்துள்ள விநாயகர் என 10-க்கும் மேற்பட்ட வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாராகி, விநாயகர் சதுர்த்திக்காக காத்திருக்கின்றன. சாக்பீஸ் தயாரிக்கப் பயன்படும் சுண்ணாம்பு கலவையால் பல வண்ணங்களில் இந்த விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, விநாயகர் சிலைகளை உருவாக்கும் தேஷா தெரிவித்ததாவது: ‘குதிரை, யானை, கிளி என விலங்கு பொம்மை, பறவை பொம்மை உட்பட பல வகை பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். விநாயகர் சதுர்த்திக்காக விநாயகர் சிலைகளையும் உருவாக்கி வருகிறோம். 8 ஆண்டுகளாக ஆவடி, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் முகாமிட்டு விநாயகர் சிலைகளை உருவாக்கி, விற்பனை செய்துவந்தோம். கடந்த ஆண்டு முதல், திருப்பாச்சூர் பகுதியில் முகாமிட்டு விநாயகர் சிலைகளை உருவாக்கி விற்பனை செய்கிறோம்.

இந்தாண்டு, அரை அடி முதல், 8 அடி வரை பல அளவுகளில் விநாயகர் சிலைகளை உருவாக்கி விற்பனைக்காக வைத்திருக்கிறோம். அளவு மற்றும் வடிவத்துக்கேற்றவாறு ரூ.50 முதல் ரூ.12 ஆயிரம் வரை விலையை நிர்ணயித்துள்ளோம். பக்தர்கள் தங்களுக்கு தேவையான விநாயகர் சிலைகளை தேர்வு செய்து, முன் தொகை கொடுத்து வருகின்றனர்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x