Published : 08 Aug 2018 10:16 AM
Last Updated : 08 Aug 2018 10:16 AM

மெரினாவில் நினைவிடம் அமைக்க காமராசர், ஜானகிக்கு இடம் ஒதுக்கப்படவில்லை: நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம்.

மெரினாவில் நினைவிடம் அமைக்க காமராசர், ஜானகி மறைந்தபோது, முதல்வராக இருந்த கருணாநிதி இடம் ஒதுக்கவில்லை, கருணாநிதி அப்போது எடுத்த நிலைப்பாட்டைப் பின்பற்றி தற்போது தமிழக அரசு தற்போது முடிவு எடுத்துள்ளது, முன்னாள் முதல்வர்கள், ஆட்சியில் இருக்கும் போது இறந்தவர்களையும் ஒரே மாதிரியாக இறுதிஅஞ்சலி செலுத்த முடியாது என்று தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

இதில் மெரினாவில் நினைவிடம் அமைக்க காமராசர், ஜானகிக்கு கருணாநிதி இடம் ஒதுக்கவில்லை. கருணாநிதி அப்போது எடுத்த நிலைப்பாட்டைப் பின்பற்றி தற்போது தமிழக அரசு எடுத்துள்ளது. முன்னாள் முதல்வர்கள், ஆட்சியில் இருக்கும் போது இறந்தவர்களையும் ஒரே மாதிரியாக இறுதிஅஞ்சலி செலுத்த முடியாது என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் உடல் அடக்கம் செய்ய மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே திமுக, கருணாநிதியின் குடும்பத்தினர் சார்பில் இடம் ஒதுக்கத் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, மெரினாவில் நினைவிடம் அமைப்பது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அங்கு நிலம் ஒதுக்க முடியாது.

அதற்குப் பதிலாக, சர்தார் வல்லபாய் படேல் பிரதான சாலை முகப்பில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு எதிரே, காந்தி மண்டபம், ராஜாஜி மணிமண்டபம் மற்றும் காமராஜர் நினைவகத்திற்கு அருகே, அவரை நல்லடக்கம் செய்வதற்கு ஏதுவாக இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்யத் தயாராக இருப்பதாகத் தமிழக முதல்வர் தெரிவித்தார்'' என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில், மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே திமுக கருணாநிதியின் உடல்நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்க உத்தரவிடக் கோரி நேற்று இரவு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு திமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் குலுவாடி ரமேஷ் உள்ளிட்டோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாளை(இன்று) காலை விசாரணைக்கு ஒத்திவைத்தனர்.

அதன்படி உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், வீர கதிரவன், ஆர்.விடுதலை ஆகியோர் வாதாடி வருகின்றனர். அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதிட்டு வருகிறார்,

மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த ஆண்டு வழக்கறிஞர் துரைசாமி, பாமக வழக்கறிஞர் பாலு, டிராபிக் ராமசாமி உள்ளிட்ட 5 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை அவர்கள் 5 பேரும் வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதையடுத்து, அந்த மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இதற்கிடையே திமுக மனுவை எதிர்த்து அரசு சார்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘திமுக தலைவர் கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்ய அண்ணா நினைவிடம் அருகே இடம் ஒதுக்க இயலவில்லை என்பது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராக திமுக எதிராக வழக்கு தொடர முடியாது. இடம் ஒதுக்க முடியாததற்கு மத்திய அரசின் விதிகளே காரணம்’’ என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு திமுக தரப்பில் வழக்கறிஞர்கள் வாதிடுகையில், ‘‘முன்னாள் முதல்வர்கள் நினைவிடத்தை மெரினாவில் அமைப்பதற்கும், விதிகளை வகுப்பதற்கும் மத்திய அரசுக்கு அதிகாரமில்லை. இறந்தவர்களின் தகுதி கருதி, மாநில அரசே முடிவு செய்யலாம்’’ எனத் தெரிவித்தனர்.

அப்போது, நீதிபதிகள், மெரினாவில் நினைவிடம் அமைக்கக் கருணாநிதிக்கு இடம் அளிக்கத் தமிழக அரசு மறுத்ததற்கான காரணம் என்ன என்பதைக் கூறுங்கள் என்று தமிழகஅரசிடம் கேள்வி எழுப்பினார்கள்.

அப்போது தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் வாதிடுகையில், ‘‘முன்னாள் முதல்வருக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கத் தமிழக அரசின் விதிமுறைகளில் இடம் இல்லை. கருணாநிதி ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜானகிக்கு இடம் மறுக்கப்பட்டது. திமுக தலைவர் மீது தமிழக அரசு மிகுந்த மரியாதை வைத்துள்ளது. கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதில் வேண்டுமென்றே திமுக அரசியலாக்குகிறது.

முன்னாள் முதல்வர்கள் காமராசர், ஜானகி அம்மாள் விவகாரத்தில் கருணாநிதி என்ன நிலைப்பாட்டைப் பின்பற்றி தமிழக அரசு இப்போது முடிவு எடுத்துள்ளது. முன்னாள் முதல்வர்களையும், பதவியில் இருக்கும்போது இறந்தவர்களையும் மரபுகள்படி ஒரேமாதிரியாகக் கருத முடியாது’’ என வாதிட்டனர்.

திமுக தரப்பில் வாதிடுகையில், ‘‘முதல்வராக இருப்பவர்களுக்கு மட்டுமே மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற சட்டம் இல்லை. அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதே சாலச் சிறந்தது.

காமராசர், காந்தி மண்டபம் ஆகியவை அடையாற்றில் உள்ளன. அவை மெரினாவில் இல்லை. இந்தத் தலைவர்களின் சித்தாந்தங்கள் திராவிட இயக்கத்தில் இருந்து வேறுபட்டவை, தலைவர்களும் வெவ்வேறானவர்கள்’’ என வாதிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x